சமூக வலைத்தளங்களில் தனது கருத்துகளை துணிச்சலாக எடுத்து வைக்கும் திரைப்பிரபலங்களில் நடிகை குஷ்புவும் ஒருவர்.
அது அரசியல் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி, அல்லது திரையுலக பிரச்சனைகளாக இருந்தாலும் சரி எந்த விவகாரமாக இருந்தாலும் அதில் தன்னுடைய நிலைப்பாட்டை தைரியமாக எடுத்து வைப்பார்.
அவரின் இந்த துணிச்சல் காரணமாகவே அவருக்கும், நெட்டிஷன்களுக்கும் அடிக்கடி விவாதம் நடக்கும். சக அரசியல் கட்சித் தலைவர்களுடன் சண்டையும் நடக்கும். இப்படி ட்விட்டரில் ஆக்டீவ்வாக இருந்த குஷ்பு நேற்று திடீரென்று ட்விட்டரை விட்டு நான் வெளியேறுகிறேன் என்று அறிவித்திருக்கிறார்.
ஏன் இந்த திடீர் முடிவு?
“காலையில் எழுந்தவுடன் உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க, செல்போனில் ட்விட்டரைத்தான் பார்க்கிறேன். காலப்போக்கில் ஏதோ நான் ட்விட்டருக்கு அடிமையாவதைப் போல தோன்றியது. தூங்கி எழுந்திருக்கும் போதே, செல்போனைத்தான் கை தேடுகிறது. இதனாலேயே, ட்விட்டரிலிருந்து வெளியேறலாம் என்று முடிவு செய்தேன்”.
”ட்விட்டர் என்னை அடிமையாக்குகிறது. நேரமும் விரயமாகிறது. பிடித்தவர்களிடம் பேச முடியவில்லை. ஆரம்ப காலங்களில் புத்தகம் படிப்பது தான் எனது பொழுது போக்கு. ட்விட்டர் வந்த பிறகு அந்த பழக்கமே இல்லாமல் போய் விட்டது. அதனால் திரும்பவும் நிறையப் புத்தகங்கள் படிக்கத் திட்டமிட்டுள்ளேன். ஏனெனில் என் வாழ்க்கை எப்போது ஒரு திறந்த புத்தகம்.
என்னிடம் அன்பும், ஆதரவும் காட்டிய அனைவருக்கும் நன்றி. நான் இங்கு எல்லையென்றாலும் அதை நீங்கள் தொடர்வீர்கள் என நம்புகிறேன். எப்போதும் என்னை அதுபோலவே நேசியுங்கள். சந்தோஷமாக இருங்கள். இந்த தளத்தை நாட்டை முன்னேற்றுவதற்கு பயன்படுத்துங்கள். மாறாக பிளவுபடுத்த பயன்படுத்த வேண்டாம். கோபங்களை மறந்து மற்றவர்களிடம் அன்பை பகிருங்கள்” தவிர, சமூக வலைதளங்களில் மட்டும்தான் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கிருந்து வேண்டுமானாலும் நம்முடைய கருத்தைச் சொல்லலாம். கொஞ்ச நாள் கழித்து மீண்டும் வருவேன்.” என்றார் குஷ்பு.