இந்த ஹாரர் படத்தின் ஆக்ஷன் ஹீரோயினாக நடிகை அஞ்சலி நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்குகிறார். ‘ஏமாலி’ படத்தின் நாயகன் ஷாம் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
அதிநவீன 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் இந்தியாவில் தயாராகும் முதல் ஹாரர் திரைப்படம் ‘லிசா’. இப்படத்தின் சண்டைக்காட்சி நேற்று படமாக்கப்பட்டபோது 3டி எஃபெக்ட்டில் தோசைக்கல்லை தூக்கி கேமரா முன் அஞ்சலி வீச வேண்டும், ஆக்ஷன் என்றதும் எதிர்பாராத விதமாக தோசைக்கல் பறந்து வந்து கேமரா அருகில் நின்ற இயக்குனரின் நெத்தியில் பட்டு புருவம் கிழிந்தது.
இரத்தம் வழிய வந்த வலியை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அந்த ஷாட் எப்படி வந்துள்ளது என பார்த்த இயக்குனர் 3டி பிரமாதமா வந்திருக்கு என சொல்லி விட்டு பிறகுதான் மருத்துமனைக்கு சென்றுள்ளார்.
நெத்தியில் தையல் போட்டு திரும்புவதற்கு நேரமாகி விட்டதால் அன்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் மக்ராந்த் தேஷ் பாண்டே மிகமுக்கிய கதாப்பாத்திரத்தில் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார்.
மறைந்த நடிகர் ரகுவரனின் இடத்தை இவர் தமிழில் பிடிப்பார் என தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா தெரிவித்தார்.