நடிகர் சங்கத்துக்கு 1 கோடி நிதி : ப்ளான் போட்ட கமல்; பெருமை சேர்த்த லைகா

னி நடிகர் சங்கத்தில்நல்ல நல்ல நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும். அதற்காகவே எனது புதுப்படத்தின் பூஜையையும் அந்த நடிகர் சங்கத்தின் இடத்திலேயே நடத்த இருக்கிறேன் என்று நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியில் சொன்னார் கமல்.

சொன்னபடியே இன்று தனது ‘சபாஷ் நாயுடு’ படத்தின் துவக்க விழாவை நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் தயாராகும் இப்படத்தை லைகா நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு நட்சத்திர கிரிக்கெட் சக்சஸ் மீட்டில் பேசிய நடிகர் கார்த்தி கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டுவதற்கு இன்னும் என்னிடம் சில திட்டங்கள் இருப்பதாக கமல் சார் சொன்னார். அவர் எங்கள் கூடவே இருப்பதாக சொல்லியிருக்கிறார். அதுவே எங்களுக்கு மிகப்பெரிய பலம் என்று கூறியிருந்தார்.

இன்று நடந்த படத்துவக்கவிழாவில் கமலின் திட்டங்களுக்கான ஆரம்பக்கட்டத்தை கண் முன்னே பார்க்க முடிந்தது. நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் படபூஜையை நடத்தியதுடன் அதன் வாடகை கட்டணமாக இரண்டரை லட்சம் ரூபாயையும் கொடுத்தார் கமல்.

அதோடு லைகா நிறுவனத் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவும் தன் சார்பில் நடிகர் சங்கத்துக்கு 1 கோடி ரூபாயை நிதியாக கொடுத்து கட்டிடம் கட்டுவதில் பெருமை சேர்த்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் முதலாவதாக பேசிய நடிகர் சங்கத் தலைவர் நாசர் இந்த நடிகர் சங்க வளாகத்தில் கமல்ஹாசன் அவர்கள் மங்களகரமான ஒரு விழாவை துவக்கி வைத்துள்ளார். அவரது திரைப்பட துவக்க விழாவை இங்கே நடத்தியுள்ளார். இதை தொடர்ந்து இங்கே பல விழாக்கள் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். இவ்விழாவை நடத்த வாடகையாக ருபாய் 2.5 லட்சத்தையும் செலுத்தியுள்ளார் என்றார்.

அடுத்ததாக பேசிய உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர் சங்க வளாகத்தில் விழாவை நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்திற்கான விளம்பரங்களில் “மீண்டும் வருவது யாரென்று தெரிகிறதா ??’’ என்ற வாசகம் இருக்கும். அதை படத்தின் தலைப்பு என்று பலரும் யூகித்து இருக்கலாம். அது படத்தில் தலைப்பு அல்ல. அந்த வாசகம் “மீண்டும் இங்கே நடிகர் சங்க நிர்வாகத்தில் பொறுப்பேற்று இருப்பது யாரென்று தெரிகிறதா?? என்பதை குறிக்கும். நடிகர் சங்க கட்டிடத்தை மீண்டும் எழுப்ப புதிதாக பொறுப்பேற்று இருக்கும் நிர்வாகம் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நிர்வாகிகள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விஷயம் இங்கே காத்து கொண்டு இருக்கிறது என்றார்.

இந்த விழாவை இங்கு நடத்தி நடிகர் சங்கத்திற்கு பெருமை சேர்த்த உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பாக எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ருபாய் 1 கோடிக்கான காசோலையை வழங்கிய லைகா குழும தலைவர் திரு. அல்லிராஜா சுபாஷ்கரன் அவர்களுக்கும் நடிகர் சங்கம்சார்பாக எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் என்றார்கள் மேடையேறிய நடிகர் சங்க நிர்வாகிகள்.

அதுமட்டுமல்ல 1 கோடி ரூபாய் நிதி திரட்டி கொடுத்த கமலின் காலில் விழுந்து ஆசியும் வாங்கினார் நடிகர் விஷால்.

kamalhaasanKarthiLyca ProductionsNaasarNadigar SangamPon VannanPrabhu‪‎Sabash Naidu‬vishal
Comments (0)
Add Comment