ஏ.டி.எம்களுக்குள்ள இருக்கிற மிஷின்களை 24 மணி நேரமும் ஏ.சி, பேன்களை எல்லாம் போட்டு பாதுகாக்குறாங்க. ஆனா அதே ஏ.டி.எம் மிஷின்ல பணம் எடுக்கப் போற மக்களோட பாதுகாப்புன்னு வர்றப்போ அது ஜீரோவாத்தான் இருக்கு.
எப்படி பணத்துக்கு பாதுகாப்பு கொடுக்கிறாங்களோ அதே அளவுக்கு அங்க பணம் எடுக்க வர்ற வாடிக்கையாளர்களையும் வங்கிகள் பாதுகாக்கணும்ங்கிற முக்கியமான விஷயத்தைத் தான் இந்தப் படத்துல சீரியஸா சொல்லியிருக்கோம் என்கிறார் தயாரிப்பாளர் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீதர்.
நமக்கு தேவைப்படும் பணத்தை நினைத்த நேரத்தில் எடுக்க உதவும் ATM மய்யத்தில், சில நேரங்களில் ஏற்படும் கொலை, கொள்ளை போன்ற அசம்பாவிதங்கள் மனிதனுக்கு எவ்வாறு ஆபத்தாகிறது என்பதை சமுக அக்கறையுடன் கூறியுள்ளனர் மய்யம் படக்குழுவினர்.
ஹார்வேஸ்ட் எண்டர்டெயின்னர்ஸ் மற்றும் ஸ்கெட்ச் புக் ப்ரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் 27 புதிய திறமைசாலிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதர். இதில் 12 பேர் இப்போதும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
ஸ்ரீதர் சார் நெனைச்சிருந்தா சினிமாவுக்குள்ள யார்கிட்ட வேண்டுமானாலும் கால்ஷூட் வாங்கி ஒரு பெரிய இயக்குநருக்கு வாய்ப்பைக் கொடுத்து இந்தப்படத்தை தயாரிச்சிருக்கலாம். ஆனால் எங்களோட திறமை மேல நம்பிக்கை வெச்சு இந்தப்படத்தை எடுத்தார். அவரோட எதிர்பார்ப்பை நாங்க பூர்த்தி செஞ்சிருக்கோம்னு நம்புறோம் என்றார் அறிமுக இயக்குநர் ஆதித்யா பாஸ்கரன்.
எத்தனையோ பேர் திறமை இருந்து சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருப்பாங்க. ஏன் நமக்கே அப்படிப்பட்ட அனுபவமெல்லாம் நடந்திருக்கு. அப்படிப்பட்ட நாம் ஒரு படத்தை தயாரிக்கணும்னு முடிவு பண்ணினப்போ ஏன் புதிய திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாதுன்னு யோசிச்சேன். அப்போ தான் இந்த கல்லூரி மாணவர்களை கூப்பிட்டுப் பேசினேன்.
முன்னப் பின்ன ஷுட்டிங்கை கூட நேர்ல பார்த்திராத இந்த பசங்களோட படத்தை தயாரான உடனே பார்த்தப்போ மனசுக்கு ரொம்ப திருப்தி. படமும் நல்லா வந்திருக்கு, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கோமேங்கிற சந்தோஷம்.
ஏ.டி.எம் கொலைகளுக்கு எதிரான படம் என்றாலும் இனிமேலும் இது தொடரக்கூடாது என்பதை இந்தப்படம் வலியுறுத்துமாம்.
மேலும் இந்தப் படத்தை முதல் முறையாக பதினைந்து கல்லூரியில் பயிலும், மாணவ, மாணவிகளை அழைத்து அவர்களுக்கு ரெட்கார்பெட் ஷோ என்கிற பெயரில் பிரத்யேக காட்சி ஒன்றை ஏற்பாடு செய்து வருகிறார்.
Against ATM Murder என்ற தலைப்பிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒவியத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகை கவுதமி அவர்கள் கையொப்பமிட்டு மய்யம் படக்குழுவினரின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இன்றைய அவசர சூழலில் மக்களுக்கு தேவையான கருத்தை சொல்லும் மய்யம் திரைப்படம் வருகிற அக்டோபர் 16 அன்று திரைக்கு வரவிருக்கிறது.