தன் வாழ்க்கை வரலாற்றை தன்னுடைய பெயரில் ஒரு படத்தை தயாரிக்கிறார்கள் என்பதைத் தவிர அந்தப் படத்துக்கும் பெரிதாக எந்த சம்பந்தமும் இல்லை. ஆனாலும் மெனக்கிட்டு படத்தின் புரமோஷனுக்காக சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்து அசத்தி விட்டுப் போனார் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி.
”எம்.எஸ்.தோனி அண்டோல்டு ஸ்டோரி” திரைப்படத்தை விளம்பரப்படுத்த வந்த நிகழ்ச்சியான அந்த நிகழ்ச்சியை வித்தியாசமாக ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆமாம், அந்த நிகழ்ச்சியில் சூர்யாவின் இரண்டு குழந்தைகளை பங்கெடுக்க வைத்து அவர்களை தோனியிடம் கேள்விகளை கேட்க வைத்தார்கள்.
தோனியை நேரில் சந்தித்த சந்தோஷம் அவர்கள் முகத்தில் தெரிய நான் உங்க அப்பாவின் ரசிகன் என்று தோனி சொன்னது அரங்கத்தையே கைதட்டல்களால் அதிர வைத்தது.
”தமிழ்நாடு எனக்கு பிடித்த மாநிலம் அதனால் தான் சென்னை அணிக்கு தலைமை ஏற்றுக் கொண்டேன். இந்தியாவில் பல இடங்களில் உணவுகளை சாப்பிட்டது உண்டு. ஆனால் சென்னை பிரியாணி போல சுவையான பிரியாணி எந்த மாநிலத்திலும் சாப்பிட்டது கிடையாது. தமிழக பெண்கள் உடை அணியும் விதம் அவர்களிடம் எனக்கு மரியாதையை உருவாக்கியுள்ளது.” என்று பேசிய தோனியிடம் சூர்யாவின் மகள் நீங்கள் வீடு, பள்ளி, மைதானம் எங்க சந்தோமாக இருப்பீர்கள்? என்கிற கேள்வியோடு கேள்வி பதிலை ஆரம்பித்தார்…
விளையாட்டு மைதானம் எனக்கு இரண்டாவது பள்ளி, பள்ளி எனக்கு இரண்டாவது வீடு, வீடு எனக்கு இரண்டாவது மைதானம்.
நான் உங்கள் அப்பா சூர்யாவின் ரசிகன். சூர்யா நடித்த “சிங்கம்” படத்தை நான் ஹிந்தியில் பார்த்து வியந்து போனேன். என்ன ஒரு கம்பீரம்…
பள்ளி பருவத்தில் தாங்கள் குறும்புத்தனம் செய்வீர்களா? என்று கேட்ட கேள்விக்கு,
நான் பள்ளி பருவத்தில் மிகவும் விளையாட்டுத்தனமாகத்தான் இருப்பேன், இந்த வயதில் இப்படிதான் இருக்க வேண்டும் என்று சொன்னவுடன் சூர்யாவின் மகனான தேவ் நானும் மிக குறும்புதனமான விளையாட்டு பையன் என்று பதிலளித்தார்.
பின்பு தோனி உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்று ரசிகர்கள் கேட்டவுடன்,
உடனே தோனி தோரனையுடன் எழுந்து நின்று சட்டையை கோதிய படி நான் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன் அவர் வழியை பின்பற்றுபவன். என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஸ்டைலில் ”என் வழி தனி வழி” என்று அவர் கூறவும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
அதோடு அன்றே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து உரையாடி விட்டுத்தான் மும்பைக்குப் பறந்தார் தோனி.