தான் கதாநாயகியாக கமிட்டாகும் படங்களில் நடிப்பதோடு சரி, அத்தோடு வேலை முடிந்தது என்று அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு போய் விடுவார் நயன் தாரா.
அவர் நடித்த படங்களின் புரமோஷன்களுக்கு அவர் வந்து ஆண்டுகள் பல ஆகி விட்டது.
சொந்தப்படம் என்பதாலும், நெருக்கமான நண்பர் என்பதால் ஆர்யா தயாரித்த ‘அமரகாவியம்’ ஆடியோ பங்ஷனுக்கு மட்டும் வந்திருந்தார்.
அதன்பிறகு அவரை எந்த பட விழாவிலும் பார்க்க முடியவில்லை.
இப்படி தொடர்ந்து தான் நடித்த படங்களின் புரமோஷன்களை தவிர்த்து வரும் நயன்தாரா நடிப்பில் ‘இது நம்ம ஆளு’ படம் தயாராகியிருக்கிறது.
சிம்பு ஹீரோவாக தயாரித்து நடித்திருக்கும் இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நயன்.
படம் தயாராகி ஒரு வருடம் ஆகி விட்ட நிலையில் அடுத்த மாதம் ரிலீஸ் செய்யும் வேலைகள் நடந்து வருவதால் படத்தின் புரமோஷன் வேலைகளும் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார் சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த படத்தின் இயக்குநர் பாண்டிராஜ்.
அப்போது அவரிடம் நயன்தாரா அவர் நடித்த எந்தப் படத்தின் புரமோஷன்களுக்கும் வருவதில்லை. அப்படி இருக்கும் போது இந்தப் படத்தின் புரமோஷனுக்கு மட்டும் எப்படி வருவார்? என்றார் ஒரு நிருபர்.
அதற்கு பதிலளித்த பாண்டிராஜ் ”சிம்புவும், நயன்தாராவும் இனிமே சேர்ந்தே நடிக்க மாட்டாங்கன்னு கூட தான் எல்லாரும் சொன்னாங்க. இப்போ சிம்பு கூட ‘இது நம்ம ஆளு’ படத்துல சேர்ந்து நடிச்சிட்டாங்க.
அதேமாதிரி தான் படத்தோட புரமோஷனுக்கும் நயன்தாராவை கூப்பிடுவேன். கண்டிப்பா வருவார் நம்புங்க” என்றார்.