கேட்காமலேயே நயன்தாராவுக்கு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தைக் கொடுத்து அழகு பார்த்தவர்கள் கோலிவுட் ரசிகர்கள்.
அந்தளவுக்கு சிறந்த கதையம்சமுள்ள படங்களில் நடித்து ரசிகர்கள் மனசில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அவர் புதுப்படங்களை கமிட் செய்யும் போது மட்டும் ஒரு கொள்கையை கடைபிடித்து வந்தார்.
அதாவது புதிதாக நடிக்கும் படங்களின் படப்பிடிப்புக்கு மட்டும் தான் வருவேன், மற்றபடி அப்படத்தின் ஆடியோ ரிலீஸ், ட்ரெய்லர் ரிலீஸ் என எந்த ஒரு புரமோஷனுக்கும் வர மாட்டேன் என்கிற கொள்கை தான் அது.
இதுபற்றி நடிகர் விவேக் கூட ஒருமுறை அவரிடம் கேட்ட போது ”நான் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வந்தால் செண்டிமெண்ட்டாக அந்தப்படம் தோல்வியடைந்து விடுகிறது” என்கிற மொக்கையான காரணத்தைச் சொல்லியிருந்தார்.
இப்படி ஒரு காரணத்தைக் காட்டிய நயன்தாரா தான் தற்போது நடித்திருக்கும் ‘அறம்’ படத்தின் அத்தனை விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வம்படியாக முன்வந்து தலை காட்ட ஆரம்பித்திருக்கிறார். சமீபகாலமான அப்படத்துக்காக டிவி சேனல்களில் நடத்தப்பட்ட பல புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்கி கலந்து கொண்டார்.
அவருடைய இந்த மாற்றத்தைப் பார்த்து ஒட்டுமொத்த கோலிவுட்டும் வாய் பிளந்து ஆச்சரியப் பார்வை பார்த்தாலும் உண்மை நிலவரம் வேறு மாதிரியாக வருகிறது.
அறம் படத்தை நயன்தாரா தான் தன்னுடைய மேனேஜர் பெயரில் தயாரித்திருக்கிறார். சொந்தப்படம் என்பதால் தான் அதனை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
சொந்தத் தயாரிப்பாக இருந்தாலும் தனது கொள்கையை தளர்த்தியதே பெரிய விஷயம். இந்த ஒரு படத்தை உதாரணம் காட்டியே தங்களுடைய படங்களின் புரமோஷன்களுக்கும் நயனைக் கூப்பிட்டு விடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள் நயனை வைத்து படமெடுக்க திட்டமிட்டிருக்கும் தயாரிப்பாளர்கள்.
பொருத்திருந்து பார்ப்போம்… வருவது ரத்தமா அல்லது தக்காளி சட்னியா என்று?