டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் அதிகப்படியான கட்டணங்களை குறைக்கக் கோரி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் பிரச்சனையில் நிரந்தரத் தீர்வு காணும் வரை புதுப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாது என்று முடிவெடுத்த தயாரிப்பாளர் சங்கம் அதன்படி மார்ச் 1 முதல் எந்தப் புதுப்படங்களையும் ரிலீஸ் செய்யவில்லை.
பல கட்ட பேச்சு வார்த்தை நடத்திப் பார்த்தும் தீர்வு கிடைக்காததால் இரண்டாவது வாரமாக போராட்டம் தொடர்கிறது. தயாரிப்பாளர்களின் இந்தப் போராட்டத்துக்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஆதரவு தரவில்லை. இருந்தாலும் புதுப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் தமிழகத் தியேட்டர்களில் கூட்டம் வெகுவாகக் குறைந்து நாள் ஒன்றுக்கு குறைந்தது 1 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் மார்ச் 16-ம் தேதி முதல் தமிழக அரசின் 8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி தியேட்டர்கள் இழுத்து மூடப்படும் என்று தியேட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்கம் ஒட்டுமொத்த தமிழ்சினிமாவுல் மார்ச் 16-ம் தேதி முதல் இயங்காது என்று அதிரடியாக அறிவித்திருப்பது டிஜிட்டல் நிறுவனங்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.
அதன்பட “மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாது, சினிமா சார்ந்த எந்த நிகழ்ச்சிகளும் நடக்காது. போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் நடக்காது. ” என்று தெரிவித்திருக்கிறது. மொத்தத்தில் ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் இயங்காது.
இந்தப் பிரச்சனையில் தயாரிப்பாளர் சங்கத்தின் தீவிர நடவடிக்கைக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் முழுமையான ஆதரவை தெரிவித்து விட்டதால் சில சங்கங்களை தயாரிப்பாளர் சங்கத்தோடு மோதவிட்டு போராட்டத்தை நசுக்கப் பார்த்த டிஜிட்டல் நிறுவனங்களுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த புதிய அறிவிப்பு பெரிய அடியாக விழுந்திருக்கிறது.