சின்னப் பையன்கிட்ட இருக்கிற திறமைகளை மதிக்கிறது நம்ம சமூகத்துல ரொம்ப சகஜம். அதிலும் திரையுலகில் அவர்களை மேடையேற்றி கெளரவப்படுத்தி மாலை போட்டு மரியாதை செய்து கூசச்செய்து விடுவார்கள்.
”ராஜாராணி” படம் வந்த போது ”இவ்ளோ சின்ன மூளைக்குள்ள எவ்ளோ பெரிய டேலண்ட்ஸ்” என்று அப்படத்தின் டைரக்டர் அட்லியை சிலாகித்தவர்கள் தான் அதிகம். அதற்காகவே அந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்தது.
அதே சமயம் இந்த தம்பி மணிரத்னம் எடுத்த ‘மெளன ராகம்’ படத்தின் கதையை உல்டா செஞ்சு ஷங்கர்கிட்ட கற்றுக் கொண்ட டெக்னிக்கல் விஷயங்களை அப்ளை செய்து சமாளிச்சிருக்காப்ல… என்கிற விமர்சனங்களும் எழுந்தது.
ஆனால் மாஸ் ஹீரோக்களுக்கு ஹிட்டு தானே முக்கியம்.
‘ராஜாராணி’யின் ஓட்டத்தைப் பார்த்து அட்லிக்கு தனது ”தெறி” படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் விஜய். படம் வழக்கம் போல தொழில்நுட்ப ரீதியில் ரசிகர்களை கவர்ந்தாலும் விஜய் ரசிகர்களை திருப்திபடுத்துகிறேன் என்கிற பெயரில் அட்லி செய்த ஆர்வக்கோளாறால் திரைக்கதையில் சுவாரஷ்யம் என்று பார்த்தால் ரசிகர்களுக்கு கழுத்தறுப்பு நிலை தான்.
இருந்தாலும் தனது 61-வது பட வாய்ப்பை மீண்டும் அட்லிக்கே கொடுத்திருக்கிறார் விஜய். அப்படிக் கொடுத்தவர் அட்லிக்கு போட்ட கண்டிஷன் ஒன்றே ஒன்று தான்.
”டைரக்ஷனை மட்டும் நீங்க பாருங்க… கதை, திரைக்கதையை வெளியில் இருந்து வாங்கிக்கலாம்” என்று கூற ஹீரோ சொன்னால் கேட்டுத்தானே ஆக வேண்டும்.
ராஜமௌலியின் அப்பாவும் பாகுபலி, பஜ்ரங்கி பைஜான் ஆகிய படங்களின் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் தான் ‘விஜய் 61’ படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறாராம்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள். அட்லி இயக்கும் அந்தப் படத்துக்கான முழு திரைக்கதையும் படப்பிடிப்புக்கு செல்லும் முன்பே இப்போது தயார் நிலையில் இருக்கிறது.
நல்ல முடிவு விஜய்!