நான் ஏற்கனவே ‘குறையொன்றுமில்லை’ படத்தில் நடித்திருந்தேன். அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாகப் போகவில்லை. அதனால் இதுதான் என்னுடைய முதல்படம் என்று சொல்லிக் கொள்வதில் தவறேதுமில்லை என்றபடியே பேச ஆரம்பித்தார் ‘ஓய்’ படத்தின் ஹீரோ கீதன் பிரிட்டோ.
இயக்குநர் ஆர்.டி.நேசனின் உதவியாளரான பிரான்சிஸ் மார்க்ஸ் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தின் நாயகி ஈஷாவை ஆந்திராவிலிருந்து பிடித்து வந்திருக்கிறார்கள்.
தொடர்ந்து நான் ஒரு புதுமுக ஹீரோ, எந்த ஹிட் படமும் கொடுத்ததில்லை. என்னை விட பெரிய ஹீரோக்களை வைத்து இந்த நிறுவனம் படம் தயாரிக்க வசதியுள்ள நிறுவனம் தான்.
அப்படியிருந்தும் என்னை இதில் ஹீரோவாக கமிட் செய்ததோடு மட்டுமில்லாமல் படத்தில் ஒரு சிலம்பாட்டக் காட்சிக்காக எனக்கு தெரியாத அந்தக் கலையை பயிற்சியும் கொடுத்து நடிக்க வைத்தார்கள் என்றார்.
‘ஓய்’ என்றால் ரொம்பவும் யோசிக்கத் தேவையில்லை. முன்னால் போகிறவரை ஓய் என்று கூப்பிடுவோம் இல்லையா..? அப்படி ஒரு சாதாரண அர்த்தம் தான் இந்தப் படத்தின் டைட்டிலாம்.
இந்தப்படம் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படம். படத்தின் ஹீரோயின், ஹீரோவை பார்த்ததும் ஓய்னு கூப்பிடுவார். ஆனால் ஹீரோ அதை காதில் வாங்கிக்காம போயிடுவார்.
அதனால் ஏற்படுகிற பிரச்சனை தான் இந்தப் படத்தோட விறுவிறுப்பான திரைக்கதை என்றார் டைரக்டர் மார்க்கஸ்.
மொத்த டீமும் புதுமுகமாக இருந்தாலும் அதை தெரிந்த முகமாக மாற்றியிருப்பது இசைஞானி இளையராஜாவின் பங்களிப்பு தான்.
இளையராஜா சார் ஒரு பெரிய லெஜண்ட். அவர் எப்படி என் கதையை ஏத்துப்பார்ங்கிற தயக்கமும், பதட்டமும் இருந்தது. ஆனால் நான் கதை சொன்ன உடனே பிடித்துப் போய் இசையமைக்க சம்மதம் சொன்னார். அதுமட்டுமில்லை உங்களுக்கு எந்த பாடலாசியரை கமிட் பண்ணனும்னு தோணுதோ? அந்த பாடலாசிரியர்களை கமிட் பண்ணிக்கங்க என்றாராம்.
அப்படி இசைஞானி கொடுத்த சுதந்திரத்தின் பாக்கியசாலி பாடலாசிரியர் விவேகா தான்.
ஆமாம் சார், இது நான் இசைஞானியின் இசையில் பாடல் எழுதும் முதல்படம். இதுவரை அந்த பாக்கியம் எனக்கு கிடைக்காமல் இருந்தது ஆனால் இந்தப்படத்தில் எனக்கு அது கிடைத்து விட்டது.
இளையராஜா சார் இசையமைக்கிறார் என்று இயக்குநர் சொன்னதும் உடனே கிளம்பிச் சென்று அவரை சந்தித்தோம். உண்மையைச் சொல்கிறேன். அவர் இசையில் பாடல் எழுதுவது என்பது மிகவும் எளிமையாக இருந்தது.
எத்தனையோ பாடல்களை எழுதி விட்டேன். இருந்தாலும், இந்தப்படத்தில் இசைஞானியின் இசையில் எழுத வாய்ப்பு கிடைத்ததற்கு இந்தப் படக்குழுக்கு நன்றி சொல்கிறேன் என்றார் பாடலாசிரியர் விவேகா!
படப்பிடிப்பு முழுமையாக முடிந்து ஆடியோ ரிலீசும் சிறப்பாக நடந்தேறி விட்டதால் படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம்.
கலக்குங்க ஓய்…