10 மாதத்துக்கு முன்பு பதவியேற்ற ஒளிப்பதிவாளர் சங்கத்தலைவராக பதவியேற்றார் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.
அன்று முதல் இன்றுவரை சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிபார்த்தபோது அதில் சுமார் 60 லட்சத்துக்கும் மேலான தொகைக்கு முந்தைய பொறுப்பில் உள்ளவர்கள் ஊழல் செய்திருப்பதாக தெரிய வரவும் நேற்று சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த ஊழல் புகார் குறித்து அவர் மேலும் கூறுவதாவது :
எங்களுக்கு முன்பாக நிர்வாகப் பொறுப்பில் இருந்த முந்தைய நிர்வாகத்தினர் தேர்தலே நடத்தாமல், 2008-இல் இருந்து 10.01.2016 வரை, 8 ஆண்டுகளாக பதவியில் இருந்தனர். சங்கத் தேர்தலை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்த வேண்டும் என்ற விதி இருந்தும், அதை மதிக்காமல், தொடர்ந்து பதவியில் இருந்தனர்.
அதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகி, தேர்தலை கடந்த 10.01.2016 தேதியில் நடத்தி, தற்போதை நிர்வாகம் 12.01.2016 அன்று பொறுப்பேற்றது. பொறுப்புக்கு வந்த புதிய நிர்வாகக்குழு, முந்தைய நிர்வாகத்தினர், சங்கத்தில் பல முறைகேடுகளை நடந்திருப்பதாக கருதுகிறது. அதில், சங்கத்தின் பொருளாதாரம் மற்றும் நிர்வாக சீர்கேடுகளும் அடங்கும்.
புதியதாக தேர்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு, முந்தைய நிர்வாகத்தினரின் 2008 முதல் 2014 வரைக்குமான கணக்குகள் மற்றும் மலேசியாவில் நடத்திய SICA AWARDS – Jan 2015 நிகழ்ச்சியின் கணக்குகளையும் சரிபார்க்கும் போது, அதில் பல குலறுபடிகள் இருப்பதை கண்டுபிடித்தது. முந்தைய அணியின் பொது செயளாலராக இருந்த திரு.G.சிவா அவர்கள், அவ்வணியின் சார்பாக, சங்கத்தின் கணக்குகளையும், அதற்குறிய ஆவணங்களையும், மறு தணிக்கைக்காக புதிய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதனால், 20.02.2016 அன்று, பழைய கணக்குகளை கேட்டு அவருக்கும், முந்தைய நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதன்படி, 09.05.2016 அன்று, நடந்த ‘நிர்வாக குழு’ கூட்டத்திற்கு நேரில் வந்த திரு.G.சிவாவும் (முன்னாள் பொது செயலாளர்), முந்தைய நிர்வாகத்தின் நிர்வாகிகளும், பத்து நாட்களுக்குள் சங்கத்தின் கணக்குகளை புதிய நிர்வாகத்தினரிடம் ஒப்படைப்பதாக வாக்கு கொடுத்தனர். ஆனால், அவர்கள் அதை செய்ய தவறியதனால், 02.06.2016 அன்று மீண்டும் அவர்களுக்கு, கணக்குகளை ஒப்படைக்கும் படி நினைவுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பின், திரு.G.சிவா அவர்கள், சங்கத்தின் கணக்குகளை, விரைவாக ஒப்படைப்பதில் தான் மிகுந்த ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டு, கணக்குகளைப்பற்றி எவ்வித தகவல்களும் இல்லாமல், வெறும் கடிதம் மட்டும் அனுப்பி இருந்தார். அதன் பின், பல காலதாமதங்களுக்கு பிறகு, கணக்குள் கொடுத்தனர்.
அதில், பல ஆவணங்களுக்கு உறிய ரசிதுகள் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, 14.08.2016 அன்று நடந்த சங்கத்தின் ‘ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில்’ சங்கத்தின் ஆடிட்டர், மலேசியாவில் நடந்த ‘SICA AWARDS’ நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட கணக்குகளில், ரூபாய் நாற்பது லட்சத்திற்கு தேவையான ஆவணங்கள் தரப்படவில்லை என்ற தகவலை தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த திரு.G.சிவா அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக் கொள்ளுவதாகவும், ரூபாய் நாற்பது லட்சத்திற்கு (Rs. 40,000,00/-) தேவையான ஆவணங்கள் அனைத்தையும், 30.09.2016 தேதிக்கு முன்பாக தான் தருவதாக, சங்க உறுப்பினர் அனைவரின் முன்னிலையில் வாக்கு கொடுத்து, பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், அதன்படி நடந்து கொள்ளவில்லை. ஆவணங்களை ஒப்படைக்கவில்லை.
மீண்டும், 17.08.2016 அன்று சங்கம், திரு.G.சிவா அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், சங்கத்தின் ஆடிட்டர் திரு. கருப்பையா அவர்கள், 2014-2015 ஆண்டுக்கான கணக்குகளை, 30.09.2016 அன்று வருமான வரித்துறைக்கு சமர்பிக்க வேண்டியதிருப்பதையும், அதனால், தகுந்த ஆவணங்கள் இல்லாத ரூபாய் நாற்பது லட்சத்திற்கான (Rs.40,000,00/-) ரசிதுகளை உடனடியாக ஒப்படைக்கும்படியும் வலியுறுத்தியது. அதற்கும் பதில் இல்லாமல் போகவே, 23.08.2016 அன்று, திரு.G.சிவா அவர்களுக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பட்டது.
அதன்பின், திரு.G.சிவா அவர்கள் சங்கத்திற்கு கடிதம் மூலமாக பதில் ஒன்று அனுப்பி இருந்தார், அதில் 31.12.2015 வரைக்குமான கணக்குகளையும் அதற்குறிய ஆவணங்களையும் 15.10.2016 முன்பாக சங்கத்திடம் ஒப்படைப்பதாக ஒப்புதல் தெரிவித்திருந்தார். ஆனால், இன்றைய தேதி வரைக்கும் முந்தைய நிர்வாகத்திற்கு தலைமை ஏற்ற திரு.சிவா அவர்களோ அல்லது முந்தைய நிர்வாகமோ, எவ்வித கணக்கையும் ஆவணங்களையும் முறையாக ஒப்படைக்கவில்லை.
இதனால், சங்கத்தின் தணிக்கை பணி, பாதியில் நிற்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக தணிக்கை செய்யப்படாத கணக்குகளால், சங்கத்தின் பணத்தில் பல லட்சங்களிலிருந்து, பல கோடி ரூபாய் வரைக்கும் தவறாக கையாளப்பட்டிருப்பது தெரிய வருகிறது. மேலும், மலேசியாவில் நடந்த SICA AWARDS நிகழ்ச்சிக்கான தொலைக்காட்சி உரிமம், சன் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டு, ஒளிப்பரப்பும் ஆனது. அதன் TDS பணமான 37.5 லட்சம் ரூபாய் மொத்த தொகையிலிருந்து கழிக்கப்பட்டது. முந்தைய கணக்கில் நடந்த ஊழல் மற்றும் வருமானவரியை உரிய காலத்தில் செலுத்த தவறியததனாலும், அப்பணத்தை திரும்ப பெற முடியாத சூழல் நிலவுகிறது.
இந்த இழப்புக்கும் மேலாக, சாலிகிராமத்தில் சங்கத்திற்கு நிலம் வாங்குவதற்காக என்ற பெயரில் அந்நிலத்தின் மதிப்புக்கு மீறி அதிகமாக, 1.25 கோடி ரூபாயை முன் பணமாக செலுத்தியதோடு மட்டுமல்லாமல், மேலும் 80 லட்சம் ரூபாயை அந்நிலத்திற்கு தரவேண்டுமென்று ஒப்பந்தம் செய்து, மிகப்பெரிய பொருளாதார இழப்பை இச்சங்கத்திற்கு திரு.G.சிவா அவர்கள் ஏற்படுத்தி இருக்கிறார். மேலும், 8 வருடமாக முறையாக வரிமான வரி செலுத்தாதனால், 80G வரிவிலக்கு பெற முடியவில்லை. அதனால், சங்கத்திற்கு வரவேண்டிய நன்கொடைகளை பெற முடியவில்லை. இதனால், சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு பென்ஷன் மற்றும் மருத்து உதவி தருவதில் சிரமம் உண்டாகிறது. மேலும் மற்ற உறுப்பினர்களுக்கு தேவையான உதவிகளும் செய்ய முடியமல் தவிக்கிறோம்” என்றார் பி.சி.ஸ்ரீராம்.