சிரிக்கத் தெரிந்த ஒரே உயிரினம் மனித இனம் மட்டும் தான். சிரிக்கத் தெரியாதவனுக்கு பகல் பொழுதும் இருட்டே என்கிறார் திருவள்ளுவர்.
சிரிக்காத நாட்களை வாழாத நாட்களாகவே கணக்கிட வேண்டும். இன்று மனஅழுத்தம் போக்க செலவில்லாத மருந்து நகைச்சுவை தான். சிரிப்பு ஒன்றே சோர்வு நீக்கும் தீர்வை தரும். புத்துணர்ச்சி தரும். எனவே தான் இப்போதெல்லாம் சிரிக்க வைக்கும் படங்கள் சிறப்பான வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் ஒரு ‘நான் ஸ்டாப் காமெடி’ படமாக உருவாகியிருக்கிறது. ‘பாலக்காட்டு மாதவன்’.
படம் பற்றி இயக்குநர் சந்திரமோஹன் பேசும் போது
”எப்போதெல்லாம் ஒரு படம் குடும்பக்கதையாக கலகலப்பாக கலர் புல்லாக இருக்கிறதோ அப்போது அது நிச்சயமான வெற்றிக்கு உத்திரவாதம் தரும். அப்படி ஒரு படமாகத்தான் உருவாகியுள்ளது ‘பாலக்காட்டு மாதவன்’.
இது பாச உணர்வையும் நகைச்சுவையையும் சம முன்னுரிமை தந்து கலந்து உருவாக்கப் பட்டுள்ளது.”என்றார்.
”’பாலக்காட்டு மாதவன்’ கே.பாக்யராஜ் அவர்களால் உருவாக்கப்பட்ட பாத்திரம். அது அவ்வளவு தூரம் அனைவரையும் சென்றடைந்தது. அந்த பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்து அதை இந்தப் படத்துக்கு வைத்திருக்கிறேன்.” “ஒரு சாதாரண மனிதனின் கதைதான் இது. அவன் ஒரு அம்மாவைத் தத்தெடுக்கிறான். அதன் பிறகு வரும் பிரச்சினைகள், சுவாரஸ்ய சம்பவங்கள் தான் கதை. மகனாக விவேக்கும் அம்மாவாக செம்மீன் ஷீலாவும் நடித்துள்ளனர்.” என்கிறார் இயக்குநர் சந்திரமோஹன்
ஏற்கெனவே ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஆடியோ ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வயிறு குலுங்க விலாநோக சிரிக்க வைக்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது.
விரைவில் ‘பாலக்காட்டு மாதவன்’ படம் ரிலீசாகவுள்ளது.