அமெரிக்காவில் விஸ்வரூபம் படப்பிடிப்பை நடத்தப் போன இடத்தில் கமலுக்கு அறிமுகமானார் பூஜா குமார்.
ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு காதல் ரோஜாவே என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அந்தப்படம் சரியாகப் போகாததால் அத்தோடு நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு அமெரிக்கா போய் செட்டிலானார்.
மீண்டும் கமல் நட்பு கிடைத்ததும் தனது நடிப்பாசைக்கு தீனி போட அவரோடு சென்னை வந்தார்.
தொடர்ந்து உத்தம வில்லன் படத்திலும் வாய்ப்பு கொடுத்தார் கமல்.
இருந்தாலும் இளம் ஹீரோக்களுடன் ஜோடி போடும் ஆசையில் வந்தவருக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் அமையவில்லை.
காத்திருந்தவருக்கு சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மீன் குழம்பும் மண் பானையும் ஆகிய படங்கள் மட்டுமே தேடி வந்தன. இதில் மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் பிரபுவுக்கு ஜோடி.
இப்படி உலக நாயகனை நம்பி பல கனவுகளுடன் சென்னை வந்தும் எதிர்பார்த்த பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகள் அமையாததால் நொந்து போனவர் மீண்டும் தனது சொந்த ஏரியாவான அமெரிக்காவுக்கே போகப் போகிறாராம்.
அங்கு பாலிவுட்டில் பிரபல ஹாலிவுட் நடிகர் வின்ஸ் வேகன் ஜோடியாக நடிக்க ஒரு வாய்ப்பு வந்திருப்பதால் அங்கேயே தொடர்ந்து நடித்து குடும்பத்தோடு செட்டிலாகி விடலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டார்.