அஜித்தை மீடியாக்கள் நேரில் சந்தித்தே பல நூறு ஆண்டுகள் ஆகி விட்டது என்றால், அவரது ரசிகர்கள் சந்தித்ததெல்லாம் கி.மு வுக்கு முந்தைய கால கட்டம் தான்.
அவரின் இந்த ”நேர்மை”யைத் தான் ‘அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு இருக்கார்” என்று திரையுலகில் இருக்கும் மற்ற ஹீரோக்களும் சிலாகிக்கிறார்கள்.
இப்படி வீட்டை விட்டு வெளியே வராமலேயே நல்ல பெயரை பல ஆண்டுகளாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் அஜித்.
ஆனால் அவரது மச்சினிச்சி ஷாமிலியோ அதற்கு நேர்மாறாக இருக்கிறார் என்று புலம்பத் தொடங்கியிருக்கிறது அவரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர் வட்டம்.
குழந்தை நட்சத்திரமாக இருந்த ஷாமிலி குமரியானவுடன் 2009லேயே ஹீரோயினாக நடிக்கத் தொடங்கி விட்டார்.
முதல் படம் சித்தார்த்துடன் ‘ஓய்’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அந்தப்படமோ வந்த வேகத்தில் பெட்டிக்குள் சுருங்கிக் கொண்டது.
அதன்பிறகு மச்சான் அஜித் மாதிரியே வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தவரை ”வீர சிவாஜி” படத்தில் தேடிப்போய் நடிக்க வைத்தார்கள்.
அங்கு தான் வந்தது தயாரிப்பாளருக்கு சோதனை!
கேட்ட சம்பளத்தை முழுதாகக் கொடுத்த பிறகு படப்பிடிப்பில் ஷாமிலியும் அவரது சகாக்களுக்கும் சேர்த்து வைக்கும் தண்டச்செலவுகளுக்கு அளவே இல்லையாம்.
வழக்கமாக பெரிய நாயகிகளுக்கு படப்பிடிப்பில் கேரவன் கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் ஷாமிலி அஜித்தின் மச்சினிச்சி என்பதால் அவருக்கும் போனால் போகிறதென்று கேரவன் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அவரோ தன்னுடன் அரட்டையடிக்க கூட்டி வந்த அரை டஜன் தோழிகளுக்கும் சேர்த்து இன்னொரு கேரவன் கொடுங்கள் என்று கேட்டு தயாரிப்பாளர் வயிற்றில் அடிக்கிறாராம்.
இப்படிப்பட்ட தண்டச் செலவுகள் ஷாமிலி தரப்பிலிருந்து அதிகரிக்கவும், விட்டால் போதுமென்று அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை வேகவேகமாக எடுத்து முடித்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
இப்படி ஒரு புகாரைத் தான் சில மாதங்களுக்கு முன்பு மலையாள தயாரிப்பாளர் ஒருவரும் ஷாமிலி மீது கூறியிருந்தது கவனிக்க வேண்டிய விஷயம்.
தயாரிப்பாளர் எந்த வகையிலும் கஷ்டப்படக்கூடாது என்று யோசிப்பவர் என்ற நல்ல பெயர் அஜித்துக்கு எப்போதுமே திரையுலகில் உண்டு. ஆனால் அவரது மச்சினிச்சி ஷாமிலியோ அவரது பெயரைகெடுக்கின்ற வகையில் இப்படி நடந்து கொள்கிறாரே? என்று வருத்தத்தோடு சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
அப்படிப்பட்ட மச்சானுக்கு இப்படியும் ஒரு மச்சினிச்சி…?