பிரசவத்தை விட நரக வேதனையில் சிக்கித் தவிக்கிறது ஒட்டுமொத்த கோடம்பாக்கமும்!
மாஸ் ஹீரோக்களில் இருந்து பீஸான ‘பல்ப்’ ஹீரோக்களின் படங்கள் வரை யாருடைய படங்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனைகள் சுற்றி நின்று பொதடியை பொளேரென்று அடிக்கின்றன.
அதிலும் விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் முதல் காட்சி போடும் வரை ரிலீஸ் உறுதியில்லை என்கிற மோசமான சூழல் ஆகி விட்டது.
இன்று அதிகாலை காட்சியே தடபுடலாக ரசிகர்களின் ஆதரவோடு ஆரம்பித்திருக்க வேண்டும் புலி.
ஆனால் நேற்று அதிகாலை திடீரென்று நடந்த ‘இன்கம்டாக்ஸ்’ ரெய்டில் மொத்த புலி டீமும் சிக்கிக் கொண்டது.
காலையில் ஆரம்பித்த ரெய்டு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறதாம். இதனால் புலியின் ரெகுலர் ரிலீசுக்கான எல்லா வேலைகளும் அப்படியே முடங்கிப் போனது.
தயாரிப்பாளர்கள் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் லேப்பில் பிரிண்டுக்கான பணத்தை எடுத்து செட்டில் செய்ய முடியாத நிலை.
இதனால் இன்று படம் ரிலீசாகுமா? இல்லையா? என்கிற சந்தேகம் நேற்று இரவே விஜய் ரசிகர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்து விட அவர்கள் ட்விட்டரில் கொதித்து விட்டார்கள். மதுரையில் அரசுப்பேருந்துக்கு கல்வீட்டு உள்ளிட்ட சில சம்பவங்களும் நடந்ததாக தெரிகிறது.
முன்னதாக காலை ஸ்பெஷல் ஷோ ரத்து செய்யப்பட்டதால் தான் இந்தப் பரபரப்பு ஏற்பட்டது.
விஷயம் கோடம்பாக்கத்தில் காட்டுத்தீயாகப் பரவவும் வாலு ரிலீசுக்கு உதவியதற்காக நன்றிக்கடன் செலுத்த ஓடோடி வந்திருக்கிறார் சிம்புவின் அப்பா டி.ஆர்
இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் தூக்கத்தை தொலைத்து பிரிண்ட் அனுப்ப வேண்டிய ஜெமினி லேப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே இன்று காலை பிரிண்டுகளை தியேட்டருக்கு அனுப்ப விஜய்யே பிரசாத் லேப்புக்கு நேரடியாக வந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினாராம்.
இப்படி பரபரப்பான காட்சிகள் அரங்கேறி ஒருவழியாக விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷம் தரும் செய்தியாக
எல்லா பிரச்சனைகளையும் தாண்டி இன்று வழக்கமான காட்சிகளுடன் காலை 11 மணிக்கு ஆரம்பமாகிறது.
ஆமாம், எல்லா தடைகளையும் ஒரே இரவில் தகர்த்தெறிந்து இன்று முதல் கம்பீரமாக ரிலீசாகிறது ‘புலி’.