ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கிடைத்த வெற்றியில் தனக்கும் பங்கிருக்கிறது என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டார் நடிகர் லாரன்ஸ்.
இதற்கும் ஏழு நாட்கள் நடந்த போராட்டத்தில் மூன்றாவது நாள் தான் நுழைந்தார் என்று போராட்டத்தில் பங்கெடுத்த மாணவர்களில் சிலர் லாரன்ஸ் மீது வெளிப்படையாகவே குற்றம் சாட்டினர். அவர் உட்பட ஆர்.ஜே.பாலாஜி, ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்டவர்களின் இந்த நடவடிக்கை பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தன்னுடன் சில மாணவர்களையும், இளைஞர்களையும் இணைத்துக் கொண்டு நேற்று முன் தினம் தமிழக முதல்வரை சந்தித்து விட்டு வந்தார்.
அந்த சந்திப்புக்குப் பிறகு நேற்று நிருபர்களை சந்தித்த லாரன்ஸ் இப்போதைக்கு நாங்கள் தர்மம் செய்யப் போகிறோம். ஜல்லிக்கட்டுக்கு கிடைத்த வெற்றியைக் கொண்டாடப் போகிறோம். அதற்காக ஒரு பாடல் ஒன்றை தயார் செய்திருக்கிறோம். தேவைப்பட்டால் அரசியலுக்கு வரவும் தயாராக இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
போலீஸ் வன்முறையில் அடிபட்ட மாணவர்கள் இன்னும் அதிலிருந்து மீளவே இல்லை. அதற்குள் இப்படி ஒரு கொண்டாட்டம் தேவைதானா? அதோடு மாணவர்களுக்கு கிடைத்த வெற்றியை நீங்க அறுவடை செய்கிறீர்களா? என்றெல்லாம் அடுத்தடுத்த கேள்விகள் வரவும் ஆவேசமாகி விட்டார் லாரன்ஸ்.
அதுவரை சாதாரணமாக இருந்த லாரன்ஸ் எப்படி காஞ்சனா படத்தில் காஞ்சனாவாக மாறுவாரோ?அந்தளவுக்கு அந்தக் கேள்வியைக் கேட்டதும் ஆக்ரோஷமாகப் பேசினார்.
”உங்க கேள்வி ரொம்ப தப்பா இருக்கு பிரதர்… ரொம்ப தப்பா இருக்கு… “ போராட்டத்தில் இருக்கும் போது பணம் தேவைப்பட்டப்போ என் மனைவியோட செயினை வெச்சுப் பணம் கொண்டு வந்தேன். பெண்களுக்குக் கழிவறை இல்லாமல் அத்தனை கஷ்டப்பட்டோம். என் தம்பி போலீஸில் அடி வாங்கியிருக்கான் தெரியுமா சார்? பிரச்சனையை பெருசுபடுத்த வேணாம்னு தான் அதையெல்லாம் நான் வெளியிலேயே சொல்லவில்லை. ” 10 வருஷமா சொந்த வீட்ல வெச்சு 60 குழந்தைகளை உதவி செஞ்சிருக்கிட்டிருக்கேன். யார்கிட்டேயும் கடன் வாங்கல, 135 ஓப்பன் ஹார்ட் ஆபரேஷன் பண்ணியிருக்கேன். 200 குழந்தைகளை கான்வெண்ட்ல படிக்க வெச்சிருக்கேன். மொட்ட சிவா கெட்ட சிவா படத்துல 1 கோடி ரூபாயை அள்ளி கொடுத்திருக்கேன். இப்படியெல்லாம் கேள்வி கேட்காதீங்க சார்…என்ற லாரன்ஸ் “அவ்வளவுதான் பிரஸ்மீட் முடிந்தது…” என்றபடி அவசரமாக வெளியேறினார்.