அரசியலுக்கு வந்து விட்டேன், விரைவில் கட்சி ஆரம்பித்து வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார் நடிகர் ரஜினி.
மன்றங்களை ஒருங்கிணைப்பது, உறுப்பினர்களைச் சேர்ப்பது என தனது ரசிகர் மன்றங்களை முடுக்கி விட்டிருக்கிறார்.
அரசியலுக்கு வந்தால், ஒரு கட்சியை தொடங்கி நடத்துவது என்பது அவ்வளவு எளிதானதல்ல, அதற்கு பல கோடி ரூபாய் நிதி தேவைப்படும், இதை எங்கிருந்து புரட்டுவீர்கள் என்று கமலிடம் கேட்டபோது என் ரசிகர்கள் எனக்குத் தருவார்கள் என்றார்.
ஆனால் ரஜினியோ தனது கட்சியை நடத்துவதற்கு பொருளாதார ரீதியான வசதிகளை ரசிகர்களிடம் எதிர்பார்க்கவில்லை, மாறாக தனக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கும் தொழிலதிபர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் தானே போன் செய்து 100 கோடி ரூபாயை வட்டிக்கு கடனாகக் கேட்டிருக்கிறார் ரஜினி. ரஜினியே நேரடியாகக் கேட்டதால் மறுப்பு சொல்ல முடியாமலும், அந்த தொகையை கொடுக்க முடியாத சூழலிலும் இருந்த அந்த தொழிலதிபர் அரசியலை நம்பி என்னால் பணம் கடனாகத் தர முடியாது என்று அன்பாகச் சொல்லி மறுத்து விட்டாராம்.
பெரும் நம்பிக்கையோடு எதிர்பார்த்த தொழிலதிபர் கை விரித்து விட்டதால், ரஜினியின் அடுத்த மூவ் லைகா புரொடக்ஷன்ஸ் உரிமையாளர் சுபாஸ்கரனிடம் இருக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
ஆக கட்சியை ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி விட்ட ரஜினி அதை தொடர்ந்து நடத்துவதற்கு 100 கோடியை செலவிடத் தயாராகி விட்டார். அப்படியானால் செலவிடும் அந்த 100 கோடியை அவர் எங்கிருந்து எடுப்பார் என்கிற கேள்வியும் எழுகிறது.
கூடவே ரஜினி சொன்ன நியாயம், தர்மம் உள்ள ஆன்மீக அரசியல் எப்படி சாத்தியம்? என்கிற எக்ஸ்ட்ரா சந்தேகக் கேள்வியையும் எழுப்புகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.