ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?
இந்தக் கேள்விக்கு இன்றுவரை தெளிவான பதிலைத் தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பித் தவிக்கிறார்கள்.
திரைப்பட விழாக்களோ, அல்லது ஏதாவது பொது நிகழ்ச்சியோ ஏதாவது ஒன்றில் அரசியலில் நுழைவதைப் பற்றி ரஜினி ஏதாவது வாய் திறக்க மாட்டாரா? என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
இன்று நடந்த ரசிகர்களுடனான சந்திப்பிலும் அந்த எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்குமா? தனது அரசியல் பிரவேசம் பற்றிப் பேசிய ரஜினி வழக்கம் போல ”அது ஆண்டவன் கையில் தான் இருக்கிறது” என்றார்.
அவர் உதடுகள் அப்படிச் சொன்னாலும் உள்ளத்தில் வேறொரு திட்டம் இருக்கிறதோ? என்கிற சந்தேகத்தை சந்திப்பு மேடையில் ரஜினியின் இருக்கையின் பின்னால் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான ப்ளக்ஸ் போர்டு அங்கு குவிந்திருந்த அத்தனை ரசிகர்களுக்குள்ளும் எழுப்பியது.
ஆமாம், ரஜினியின் பெர்சனல் சந்திப்பு என்றால் அதில் அவருடைய ஃபேவரைட் ராகவேந்திரா சுவாமியின் புகைப்படமோ அல்லது பாபா முத்திரையோ தான் இருக்கும். ஆனால் இந்த பாபா முத்திரையோடு தாமரை இலையும் காட்சி தந்தது.
இந்தப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானதும் பி.ஜே.பியில் சேருமாறு தனது ரசிகர்களை குறிப்பால் உணர்த்துகிறார் ரஜினி என்கிற முடிவுக்கு வந்து விட்டது ஒட்டு மொத்த சமூகமும்!
அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. மோடி தலைமையிலான பி.ஜே.பி கட்சி தமிழகத்தில் வலுவாக காலூன்ற ரஜினி மாதிரியான கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட தலைமை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறது. அதோடு கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்று ஒரே நாள் இரவில் 1000, 500 ரூபாய் தாள்கள் செல்லாது என்று மோடி அறிவித்த போது அதை முதலில் வரவேற்று ட்வீட்டியது ரஜினி தான். இப்படி பி.ஜே.பிக்கும், ரஜினிக்கு பல விவகாரங்களில் கருத்தொற்றுமை இருந்து வருகிறது.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது ரஜினியின் அரசியல் மூவ் பி.ஜே.பியுடன் சேர்ந்ததாக இருக்குமோ? என்று சந்தேகம் எழுகி்றது.
இதைப்பற்றி அவர் வாய் திறக்கவில்லை என்றாலும், ரஜினியின் பின்னால் இருந்த ப்ளக்ஸ் போர்டு அவரது எண்ணத்தை காட்டிக் கொடுத்து விட்டது என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.
இந்த சந்தேகத்துக்காவது ரஜினி குழப்பமில்லாத தெளிவான விளக்கத்தை கொடுத்தால் நல்லது!