கபாலி வரலாறு காணாத வெற்றி! : ரஜினி மகிழ்ச்சி ; ரசிகர்களுக்கு நன்றிக் கடிதம்

‘கபாலி’ வரலாறு காணாத வசூல் சாதனையை சந்தித்த சந்தோஷத்தில் அதன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

அந்த சந்தோஷத்தோடு இன்று கூடுதல் சந்தோஷமாக ஓய்வுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :

”என்னை வாழ வைக்கும் தமிழக மக்களாகிய அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள்.

‘லைக்கா’ தயாரிப்பில், திரு.ஷங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘2.0’ மற்றும் நண்பர் தாணு அவர்களின் தயாரிப்பில், பா.ரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான, மலேசியாவிலும், இந்தியாவிலும் எடுக்கப்பட்ட ‘கபாலி’ படத்தில் ஓய்வில்லாமல் நடித்ததன் காரணமாக கொஞ்சம் உடல்நலத்திற்கும், மனதிற்கும் ஓய்வு தேவைப்பட்டது.

அதை ஒட்டி இரண்டு மாதங்கள் என்னுடைய புதல்வி ஐஸ்வர்யா தனுஷ் அவர்களுடன் ஓய்வெடுத்தும், மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் மிக உற்சாகத்துடனும் தாய் மண்ணிற்குத் திரும்பிய எனக்கு ‘கபாலி’ படத்தின் மிகப்பெரிய வெற்றிச் செய்தியை அமெரிக்காவில் கேள்விப்பட்டதை இன்று நேரடியாகப் பார்த்து, உணர்ந்து மிக்க சந்தோஷத்தில் இருக்கிறேன்.

இப்படத்தைத் தயாரித்த என்னுடைய நெடுங்கால நெருங்கிய நண்பர் தாணு அவர்களுக்கும், எழுதி, இயக்கிய பா.ரஞ்சித் அவர்களுக்கும், குழுவினர் அனைவருக்கும், சக நடிக, நடிகையர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக்கிய எனது அன்பு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் முக்கியமாக தாய்மார்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தலை வணங்கி என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகிழ்ச்சி!
ரஜினிகாந்த்

KabalirajiniRajinikanthRanjith
Comments (0)
Add Comment