வடிவேலுவை ஆட்டிப் படைக்கும் ஹீரோ ஆசை! : மாட்டிக்கொண்ட ‘புலி’ டைரக்டர்

சென்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாறியதால் திரையுலகில் வடிவேலுவின் காட்சியும் மாறி விட்டது.

ஆளும் கட்சிக்கு பயந்தே பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்கவில்லை. அதன் விளைவாக சுமார் இரண்டு வருடங்களாக வடிவேலுவை எந்த படங்களிலும் பார்க்க முடியவில்லை. மாறாக சந்தானம், சூரி போன்ற காமெடி நடிகர்கள் காட்டில் அடை மழை பெய்தது.

பின்னர் தேர்தல் சூடு குறையவும் மீண்டும் ‘தெனாலிராமன்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தன்னைத் தேடி வருகிற மற்ற நடிகர்களின் படங்களில் கூட காமெடி கேரக்டரில் நடிக்க மறுத்தார்.

அதற்கு காரணம் அவரை ஆட்டிப் படைத்து வரும் ஹீரோ ஆசை தான். அவரைச் சுற்றியிருக்கும் புண்ணியவான்கள் எல்லாருமே தொடர்ந்து ”ஹீரோவா நீங்க ஒரு ஹிட்டை கொடுத்தே ஆகணும்னே” என்று  உசுப்பேத்திக் கொண்டிருக்கிறார்களாம்.

அதனாலேயே மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடி செய்யவே மாட்டேன் என்று இன்றுவரை பிடிவாதமாக இருந்து வருகிறார்.

அப்படியும் ‘எலி’ என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்துப் பார்த்தார். அது புளுக்கை போட்டது தான் மிச்சம், பல கோடிகளை இழந்த அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் வடிவேலு மீது புகார் கொடுத்த கதையெல்லாம் உண்டு.

இவ்வளவு நடந்த பிறகும் தனது ஹீரோ ஆசையை விட முடியாத வடிவேலு தான்  நடித்த படங்களில் நல்ல வசூலோடு ஹிட்டான ஒரே படமான ”இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி” யை இயக்கிய இயக்குநர் சிம்புதேவனிடம் அதன் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

‘புலி’ தோல்விக்குப் பிறகு தானும் ஒரு ஹிட்டை கொடுத்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் இயக்குநர் சிம்பு தேவனும் ஓ.கே சொல்லியிருக்கிறாராம்.

மீண்டும் ‘புலிகேசி’யை வைத்து கணக்கு போடுகிறார் கைப்புள்ள வடிவேலு; டேலி ஆனா சரி தான்…

'Imsai Arasan 23am Pulikesi' sequelChimbu Devenvadiveluஇம்சை அரசன் 23-ஆம் புலிகேசிவடிவேலு
Comments (0)
Add Comment