தமிழில் பிரம்மாண்ட சரித்திரப் படமாக தயாராகி வரும் சுந்தர் சியின் சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகி விட்டார் என்று நேற்று அறிவித்தது தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ்.
அவர் ஏன் எதற்காக விலகினார் போன்ற கேள்விகளுக்கு தயாரிப்பு நிறுவனம் சரியான விளக்கம் கொடுக்கவில்லை. இதற்கிடையே தான் ஏன் அந்தப்படத்திலிருந்து விலக நேர்ந்தது என்பதற்கான காரணங்களை தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
இதுகுறித்து அவர் தரப்பில் கூறப்படுவதாவது ”துரதிர்ஷ்டவசமாக ‘சங்கமித்ரா’வில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார்.
இந்த படம் எவ்வளவு பெரியது, இரண்டு வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார். தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்பு தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்கு தெரியும்.
படப்பிடிப்புக்கு தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்து விட்டார். ஆனல், ‘சங்கமித்ரா’ படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை தாண்டி, இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது. முழுமையான ஸ்க்ரிப்ட் அவருக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்.
ஸ்ருதி, தற்போது, அவர் நடித்துள்ள ‘பெஹன் ஹோகி தேரி’ பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறார். தொடர்ந்து ‘சபாஷ் நாயுடு’ படத்துக்காக தயாராகி வருகிறார்.