நான் தான் நடிப்பேன் : வாய்ப்புக்காக அப்பாவிடம் சண்டை போட்ட சக்தி வாசு!

சினிமா பின்புலம் இருந்தாலும் எல்லா வாரிசு நடிகர்களும் தமிழ்சினிமாவில் முன்னணி ஹீரோவாகி விடுவதில்லை.

அதற்காக அவர்கள் சினிமாவில் போராடுவதையும் கைவிடவில்லை. தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்றாவது ஒருநாள் அங்கீகாரம் கிடைக்குமென்கிற நம்பிக்கையில் கிடைக்கிற சின்னச் சின்ன வாய்ப்பையும் பயன்படுத்துகிறார்கள்.

‘தொட்டால் பூ மலரும்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபல இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்தி வாசு. தொடர்ந்து ஆட்ட நாயகன், தற்காப்பு என சில படங்கள் ஹீரோவாக நடித்தும் தமிழ்சினிமாவில் அவருடைய கேரியர் மெச்சும்படி இல்லை.

ஆனால் கன்னடத்தில் சக்திவாசுவுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி இடமே உண்டு என்றால் அது ஆச்சரியம் தானே? எல்லாம் ‘சிவலிங்கா’ கொடுத்த தாறுமாறான ஹிட்டு தான். சிவராஜ்குமார் நடிப்பில் ரிலீசாகி வசூலில் சக்கை போடு போட்ட படம் தான் இந்த சிவலிங்கா. க்ரைம், ஹாரர், த்ரில்லர் என மூன்றும் கொண்ட இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து அங்குள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் சக்தி வாசு. கன்னட ஊடகங்களும் இவர் இயக்குநர் பி.வாசுவின் மகன் என்று தனியாக கோடிட்டுக் காட்டியிருக்கின்றன.

அந்தளவுக்கு நடிப்பில் மெச்சுரிட்டி காட்டியிருக்கும் சக்தி வாசு அதே படம் தமிழில் ரீமேக் ஆகிறது என்று கேள்விப்பட்டவுடன் அப்பா வாசுவிடம் போய் நின்றாராம்.

இந்த ‘சிவலிங்கா’வோட கதை டிஸ்கஷன்ல இருந்தப்பவே அப்பாக்கிட்ட இந்தக் கேரக்டர் யார் பண்றாங்க?ன்னு கேட்டேன். யாராவது ஒரு நல்ல நடிகரை தேடிப்பிடிச்சுப் போடணும்னு சொன்னார். உடனே எதுக்கு நானே அந்தக் கேரக்டர்ல நடிக்கிறேன்னு சண்டை போட்டு வாங்கி நடிச்சேன். கன்னடத்துல என்னோட நடிப்பை ரொம்பப் பாராட்டினாங்க. அதே படம் தமிழ்ல ரீமேக் ஆகுதுன்னு சொன்னப்பறம் இதுதான் என்னோட கேரியரை தமிழ்ல ஸ்டெடி பண்றதுக்கு சரியான சந்தர்ப்பம்னு அதே கேரக்டரை தமிழ்ல்ல நடிக்கிறேன். கண்டிப்பா இந்தப்படம் எனக்கு தமிழ்ல ஒரு ப்ரேக் கொடுக்கிற படமா அமையும் என்றார்.

ஆரம்பத்துல நான் தேர்வு செஞ்சு நடிச்ச படங்கள் என்னோட வயசுக்கு மீறின ஓவர் டோஸ் படங்களா இருந்துச்சு. எப்பவுமே அப்பா என்னோட கதை கேட்கிற விஷயத்துல தலையிடுறது கெடையாது. நானே கதையைக் கேட்டுட்டு அப்பாக்கிட்ட இந்த மாதிரி ஒரு வாய்ப்பு வந்திருக்குன்னு சொல்வேன். உனக்கு ஓ.கேன்னா நடின்னு சொல்வார். அவரு ஏதாவது கருத்துச் சொல்லப்போய் அது என்னோட மனசை புண்படுத்திடக் கூடாதுங்கிறதுனால தான் அவர் என்னோட விஷயத்துல மூக்கை நுழைக்காம இருந்தார்.

சிவலிங்காவுல நடிச்சதுக்கு அப்புறம் எனக்கு ரொம்ப மெச்சூரிட்டி வந்துருச்சு. எந்த மாதிரியான கதைகள்ல நடிச்சா எனக்கு செட்டாகும்னு தெரிய ஆரம்பிச்சிருக்கு. தமிழ்ல சிவலிங்கா ரிலீசானதுக்கப்புறம் சக்தி வாசுவுக்கு இப்படியெல்லாம் நடிக்க வருமான்னு இயக்குநர்கள் ஆச்சரியப்படலாம். எனக்கான நல்ல பட வாய்ப்புகள் அதுக்கப்புறம் என்னைத் தேடி வரலாம் என்கிறார் நம்பிக்கையோடு!

எதுக்கும் ஒரு துண்டு போட்டு வெச்சுக்கங்க டைரக்டர்ஸ்!

actor lawrenceP.vasuRaghava LawrenceRitika SinghShakthi Vasushiva lingashiva rajkumar
Comments (0)
Add Comment