இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘தலைவா’ திரைப்படம் ரிலீஸ் நேரத்தில் என்னென்ன சிரமங்களை சந்தித்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆளும் கட்சியில் குடைச்சல்கள் என்பதால் விஜய் கூட தன்னால் எந்தளவுக்கு வாய்ஸ் கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு கொடுத்து விட்டு ஒரு ஹீரோவாக அந்த படத்தின் வேலைகளை செய்ததோடு ஒதுங்கிக் கொண்டார்.
ஒருவழியாக பஞ்சாயத்துகள் எல்லாம் முடிந்து படம் ரிலீசாகியும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதனால் அந்தப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் பெரிய அளவில் நஷ்டப்பட்டார்.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர் விஜய் இன்னொரு படம் நடித்துத் தருவார் என்பது ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் அந்த நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக அதே தலைவா படத்தில் நடித்த சந்தானமும் தன் பங்குக்கு உதவியிருக்கிறார்.
ஆமாம், சமீபத்தில் சந்தானம் நடிப்பில் ரிலீசான தில்லுக்கு துட்டு படத்தின் விநியோக உரிமையை வாங்கி வெளியிட்டார் சந்திர பிரகாஷ் ஜெயின்.
படம் எதிர்பார்த்ததை விட அவருக்கு நல்ல லாபத்தை கொடுத்திருப்பதால் குஷியானவர் சந்தானத்துக்கு நன்றி தெரிவித்ததோடு அவரை வைத்து ஒரு படம் தயாரிக்கவும் தயாராகி வருகிறாராம்.
நன்றிக்கு நன்றி!