நாயைத் தொடர்ந்து புலியோடு நடிக்கும் சிபிராஜ்!

‘மாயோன்’  ‘ரங்கா’ படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சிபிராஜ் அவருக்கு மிகவும் பிடித்த இயக்குனரான தரணிதரன் உடன் மீண்டும் ஒரு புதுப்படத்தில் இணைகிறார்.

இந்த படத்தில் சிபிராஜ் காட்டிலாகா அதிகாரியாக நடிக்கிறார். தற்காலிகமாக ‘தயாரிப்பு எண் 4’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை எம்.ஜி ஆரா சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் காவ்யா மகேஷ் தயாரிக்கிறார்.

இதுகுறித்து நடிகர் சிபி சத்யராஜ் கூறும்போது, “இந்த கதையின் மையக்கரு உடனடியாக என்னை ஈர்த்தது. என்ன ஆனாலும் தவற விடக்கூடாது என நினைக்கும் வகையில் ஒரு சில கதைகள் நமக்கு அமையும். தரணிதரன் சார், ‘எல்லோருக்கும் விருந்து’ என நான் நம்பும் வகையில் ஒரு கதையுடன் வந்தார்.

இதற்கு மேல் கதையை பற்றிய விஷயங்களை நான் சொல்ல முடியாது. நான் ஒரு காட்டிலாகா அதிகாரியாக நடிக்கிறேன். புலி ஒன்று படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இருக்கும்” என்றார்.

இயக்குனர் தரணிதரன் கூறும்போது, “ஒவ்வொரு படத்திலும், சிபி சார் தனித்துவமான கதாபாத்திரங்கள் மூலம் தன்னை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். முன்னதாக நாங்கள் ஒரு படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றியிருக்கிறோம். என்றாலும் இந்த கதையை அவர் ஒப்புக் கொள்வாரா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.

ஏனெனில் அவர் நிறைய படங்களை கையில் வைத்திருந்தார். இருப்பினும், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவரை விட யாரையும் என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. இந்த கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமாக இருந்தார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்து வருகிறோம். விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம்” என்றார்.

Auraa CinemasDharani DharanMovie NewsProduction No 4Sibiraj
Comments (0)
Add Comment