”எல்லோருமே எனக்கு நிறைய வெற்றிகள் வந்துக் கொண்டிருக்கிறது என நினைக்கலாம். ஆனால், அது தான் பெரிய பயத்தைக் கொடுக்கிறது. ஏனென்றால் நான் யாருடைய வெற்றியையோ திருடிக் கொண்டு வந்தது மாதிரி நினைக்கிறார்கள். எங்களை நிம்மதியா வேலை செய்ய விடுங்க…” என்று ரெமோ வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் அழுது புரண்டது பலரையும் புருவம் உயர்த்த வைத்ததோடு மட்டுமில்லாமல் ஆளாளுக்கு அதைப்பற்றி விவாதிக்கவும் தொடங்கி விட்டார்கள்.
”சிவகார்த்திகேயன் பாவம்” என்று ஒருசிலர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தாலும் சிவகார்த்திகேயன் தன்னை வளர்த்து விட்ட தனுஷ், இயக்குநர் பாண்டிராஜ், தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் என எல்லோரையும் நன்றி மறந்து விட்டார். அப்படிச் செய்தவர் மேடையில் அழுததெல்லாம் சீன் தான் என்று அவருடைய நடவடிக்கைகளை விமர்சனம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக சிவகார்த்திகேயன் நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்திருப்பதாக சொல்கிறார்கள். நடிகர் சங்கச் செயலாளர் விஷாலும் சிவகார்த்திகேயன் அழுதது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று தெரிவித்தார்.
இதற்கிடையே தனது அழுகாச்சி காவியத்துக்கு குட்பை சொல்லி விட்டு தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் சிவகார்த்திகேயன்.
‘ரெமோ’ படம் பிரமாண்ட வெற்றி பெற்றதையடுத்து அந்தப் படத்தை தயாரித்த 24AM ஸ்டூடியோ நிறுவனத்தின் அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயன் தான் ஹீரோவாக நடிக்கிறார்.
தனி ஒருவன் இயக்குநர் மோகன் ராஜா இயக்கவுள்ள இந்த படத்தில் முதன்முறையாக நயன்தாரா அவருடன் ஜோடி சேரவுள்ளார். அதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் 11ம் தேதி தொடங்கும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இன்னொரு கண்ணீர் வராம இருந்தால் நல்லது!