முன்னதாக ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்பட்ட நிலையில், சிவா திரைக்கதை எழுதும் வேலைகளை முடிக்காததால் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் எனக் கூறப்பட்டது.
அதன்படி பிப்ரவரி 23-ம் தேதி படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்காக ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட்டுகள் போடப்படும் பணிகள் நடைபெற்று வந்தன.
இதற்கிடையே மார்ச் மாதத்தில் கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் சேவை தரும் நிறுவனங்களுக்கு எதிராக தமிழ் திரையுலகம் ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டதால் படங்களின் ஷூட்டிங் பணிகள் தவிர்க்கப்பட்டன. இதனால் விஸ்வாசம் படப்பிடிப்பும் தடை பட்டது.
தற்போது திரையுலகின் போராட்டம் முடிவுக்கு வந்து எல்லா வேலைகளும் வேகமெடுத்திருப்பதால் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பும் மே 7-ம் தேதியான இன்று முதல் தொடங்க இருக்கிறது.
இதற்காக, நேற்று மே 6-ம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலமாக ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார் அஜித். அங்கு நடக்கும் படப்பிடிப்பைத் தொடர்ந்து பிறகு மும்பையில் நடக்கவிருக்கும் படப்பிடிப்பிலும் கலந்து கொள்கிறார்.
முன்னதாக படப்பிடிப்புக்காக சென்னை விமான நிலையத்துக்கு நேற்று வந்த அஜித்துடன் இசையமைப்பாளர் தமன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதேபோல அஜித் விமானத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களும் வெளியாகி அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. ஜனவரி மாதமே ஆரம்பிக்க வேண்டிய விஸ்வாசம் படம் சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்டாலும் இப்போதாவது ஆரம்பித்தார்களே என்று உற்சாகத்தில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.