கடந்த இரண்டு வருடங்களாக வீட்டுக்குள்ளேயே மையம் கொண்டிருந்த ”வைகைப்புயல்” மீண்டும் தமிழ்சினிமாவை தாக்க ஆரம்பித்து விட்டது.
இப்படி எப்படி வேண்டுமானாலும் வடிவேலுவுக்கு இண்ட்ரோ கொடுக்கலாம். அவர் விட்ட கேப்பில் பலரும் காமெடி செய்கிறேன் பேர்வழி ரசிகர்களை கொடுமைப்படுத்தியது திரையுலக வரலாற்றில் இருக்கும் குறிப்புகள் தான்.
நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற தனது பிடிவாதத்துக்கு எண்ட்டு கார்டு போட்டு விட்டு, மீண்டும் மற்ற ஹீரோக்களின் படங்களில் தனி காமெடியனாக எண்ட்ரி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
வடிவேலுவின் இந்த ரீ- எண்ட்ரி சக காமெடியன்கள் வயிற்றில் புளியைக் கரைத்தாலும் ரசிகர்கள் மத்தியில் என்னவோ நிரம்ப வழியுது உற்சாகம் தான்.ஆனால் இந்த இடைவெளி நான் விட்டதில்லை என்றார் வடிவேலு.
விஷால் தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கியிருக்கும் ”கத்தி சண்டை” படத்தில் ரீ-எண்ட்ரி போட்டிருக்கும் வடிவேலு அப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
”இந்த மேடையில பேசின எல்லாரும் வடிவேலு கம்பேக் கம்பேக்குன்னு சொன்னாங்க. நான் கேப்பே விடல, நடிக்காம இருந்த ரெண்டு வருஷ காலமாக எனக்கு பட வாய்ப்புகள் வந்துக்கிட்டு தான் இருந்துச்சு. பல கதைகளை கேட்டேன். அதுல எனக்கு ரொம்ப பிடிச்சக் கதை தான் இந்த ”கத்தி சண்டை” படத்தோட கதை.
விஷாலோட எனக்கு மூன்று வெற்றிகள் கிடைச்சிருக்கு. ஒண்ணு அவரோட நடிச்ச ”திமிர்” படம் வெற்றி, ரெண்டாவதா ”நடிகர் சங்கத்தை காணோம்”னு ஒரு படம் வெற்றி ( நடிகர் சங்கத்தேர்தலில் வெற்றி பெற்றது ) அப்புறம் மூணாவதா இந்த ”கத்தி சண்டை” படத்துல நடிச்சது. என்னைப் பொருத்த வரைக்கும் இந்த மேடை எனக்கு 100-வது வெற்றி விழா மேடை தான். அந்தளவுக்கு நம்பிக்கையோட சொல்றேன் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமா அமையும்.
எனக்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவும், மீடியாக்களோட ஆதரவும் இருந்துக்கிட்டே இருக்கு. என்னோட காமெடியை நான் ரசிகர்கள்கிட்ட இருந்து நான் எடுத்து நடிக்கிறேன். பலபேரை பார்க்கிறோம் அதுல நம்ம கண்ணுக்கு காமெடியாப் படுறதை சீனா பண்ணி சிரிக்க வைக்கிறேன். என்னை லெஜண்ட்டுன்னு சொன்னாங்க. அப்படின்னா என்னென்னே எனக்கு தெரியாது. இன்னைக்கும் எனக்கு ரசிகர்களோட ஆதரவு இருக்கு. அந்த ஆதரவு இருக்கிற வரைக்கும் எனக்கு கேப்பும் கிடையாது; ஆப்பும் கிடையாது… எப்பவுமே டாப்பு தான்…! என்றார் அவருக்கே உரிய அக்மார்க் கல… கல… புன்னைகையோடு!