ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வாய் உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கிறது மாணவர்கள், இளைஞர்கள் முன்னின்று நடத்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம்.
குறிப்பாக மெரினாவில் நடைபெறும் போராட்டம் உலகம் முழுக்க உள்ளவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது. அதோடு சென்னை என்பதால் அங்கிருக்கும் நடிகர், நடிகைகளும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
அப்படி வருகிற நடிகர், நடிகைகளைக் கூட ஒரு நடிகராகப் பார்த்து ஆர்ப்பரிக்காமல் ஒரு தமிழனாக மட்டுமே களத்தில் உட்காரச் சொல்கிறது இளைஞர்கள் கூட்டம்.
தன்னோட படம் ரிலீசான போதெல்லாம் ஓடி ஓடி போஸ்டர் ஒட்டியும், கட்-அவுட்டின் மேல் நின்று பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடியவர்களா இவர்கள்? என்று வியக்கிறார்கள் போராட்டக்களத்துக்கு சென்று திரும்பும் அத்தனை நடிகர்களும்.
இதற்கிடையே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நடிகர் விஜய் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
மாறாக மெரினாவில் போராடும் இளைஞர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் மெரினாவுக்கு வந்த விஜய் பாதி முகத்தை கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு போராட்டத்தில் மாணவர்களோடு மாணவராக ஐக்கியமானார். இளைஞர்களின் போராட்டம் நம்மால் கவனம் சிதறி விடக்கூடாது என்பதாலேயே அவர் பாதி முகத்தை மூடிக்கொண்டு வந்ததாகச் சொல்லப்பட்டாலும் அவரைக் கண்டு மாணவர்கள் எந்த வித ஆர்ப்பாட்டமும் செய்யாமல் தொடர்ந்து உறுதியோடு போராட்டத்தை முன்னெடுத்ததைக் கண்டு விஜய்யே ஆச்சரியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விஜய் ரசிகர்கள் பெருமைப்பட்டுக்கங்கப்பா…!!