தமிழில் சிறந்த பத்து படங்களை வரிசைப்படுத்தினால் அதில் ‘பொற்காலம்’, ‘தவமாய் தவமிருந்து’, ‘ஆட்டோகிராப்’ என சேரன் இயக்கிய படங்களில் ஏதாவது ஒன்றுக்கு கண்டிப்பாக இடம் கிடைக்கும்.
அந்தளவுக்கு அண்ணன் – தங்கை பாசம், அப்பா – மகன் பாசம் என குடும்ப உறவுகளை தனது படங்களில் அழகாகக் காட்சிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தையே உருவாக்கி வைத்திருந்தார்.
ஒரு இயக்குநராக கொண்டாடப்பட்ட சேரன் ஹீரோவாக பாதை மாற ஆரம்பித்ததும், ரசிகர்கள் அவரை ரசிக்க விரும்பவில்லை.
விளைவு, கமர்ஷியல் களேபரத்தில் கட்டிப் புரண்ட ஹீரோக்களும் கூட சேரன் படங்களில் நடிக்க முன்வரவில்லை. அதோடு அவர் கடைசியாக எடுத்து வைத்திருந்த ”ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை” படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யாமல் ‘சிடி’க்களாக போட்டு விற்கும் ‘C2H’ என்கிற புதிய தொழிலை ஆரம்பித்தார்.
தியேட்டர்களுக்கு எதிராக பார்க்கப்பட்ட இந்த தொழில் சேரனுக்கு பெரும் நெருக்கடிகளைக் கொடுத்தது. என்றாலும் தன் முயற்சியிலிருந்து பின் வாங்காதவர் ஐ.டி.கம்பெனி ஊழியர் போல கழுத்தில் டேக் மாட்டிக்கொண்டு கையில் ஒரு சிடியையும் பிடித்துக் கொண்டு வீடு வீடாக சிடி விற்கக் கிளம்பினார். அவரின் அந்த கோலத்தைப் பார்த்து கோலிவுட் மட்டுமல்ல, ஓட்டுமொத்த சினிமா ரசிகர்களும் அதிர்ச்சியோடு பார்த்தனர்.
பெரு முதலாளிகள் எதிர்பார்த்தபடியே சேரன் என்ற ஒரு தனி மனிதனால் முன்னெடுக்கப்பட்ட அந்த முயற்சி பெரும் தோல்வியைத் தர, அந்த தொழிலில் முதலீடு செய்தவர்களுடன் பஞ்சாயத்து, கோர்ட் கேஸ் என்று அலைந்து கொண்டிருந்தார்.
அப்படிப்பட்ட சினிமா நேசிப்பாளரான சேரனை மீண்டும் ஒரு இயக்குநராக்கிப் பார்க்க சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறது தமிழ்சினிமா.
சேரனுக்காக இந்த பேருதவியை செய்ய முன் வந்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.
மீண்டும் படம் இயக்கும் முடிவில் இருந்த சேரனுக்கு சரியான ஹீரோ அமைந்தால் நிம்மதி என்று தேடிக் கொண்டிருந்த போது தான் அந்த தகவல் விஜய் சேதுபதி காதுகளை எட்டியிருக்கிறது.
உடனே நேரில் சென்று சேரனைச் சந்தித்து கதையைக் கேட்டு விட்டு ”உங்க டைரக்ஷன்ல கண்டிப்பா நடிக்கிறேன் சார்” என்று உத்தரவாதம் கொடுத்து விட்டு வந்திருக்கிறார் விஜய் சேதுபதி.
சிடி விற்றுக் கொண்டிருந்த சேரனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஜமாய்ங்க ஜி!