‘24′ படத்தின் திருட்டு விசிடி வந்து விட்டது. இனி என் ‘மருது’ படத்துக்கும் திருட்டு விசிடி தயாரிக்க ஒரு கும்பல் தயாராகி வரும்.
அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இந்தத் தடவை நான் சும்மா விட மாட்டேன். நானும் எனது ரசிகர்களும் மருது திரைப்படம் வெளியான முதல் நாளில் திருட்டு விசிடி விற்கும் கும்பலை கண்டிப்பாக பிடித்துக் கொடுப்போம், நான் மட்டும் தான் தொடர்ந்து திருட்டு விசிடிக்கு எதிராக போராடி வருகிறேன் என்று சில தினங்களுக்கு முன்பு மருது பத்திரிகையாளர் சந்திப்பில் ஆவேசமாகப் பேசினார் விஷால்.
வருகிற 20 ஆம் தேதி ‘மருது’ திரைப்படம் ரிலீசாக உள்ள நிலையில் நேற்றே திருட்டு விசிடிக்கு எதிரான தனது போராட்டத்தை ஆரம்பித்து விட்டார் விஷால்.
அதுவும் அவர் படமல்ல, இளைய தளபதி விஜய் நடிப்பில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தெறி படத்தின் திருட்டு விசிடிக்கு எதிராக தனது சாட்டையை சுழட்டியிருக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில், “தெறி” திரைப்படம் பேருந்தில் உள்ள தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டுள்ளது.
அதைப் பார்த்த பயணிகளில் ஒருவர் நடிகர் விஷால் நம்பரை இணையதளம் மூலம் கண்டறிந்து அவரை போனில் தொடர்பு கொண்டு இச்செய்தியை கூறியிருக்கிறார்.
அந்த செய்தியை உறுதி செய்யும் விதமாக நடிகர் விஷால் அந்த பயணியிடம் ஒளிபரப்பாகும் அந்த படத்தை செல்போனில் வீடியோ எடுக்குமாறு சொல்லவே அந்த பயணியும் நடந்தவற்றை செல்போனில் வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார்.
இதை அடுத்து விஷால் திருட்டு விசிடி தடுப்பு சிறப்பு ஆய்வாளர் ஜெயலட்சுமியிடம் இதைப் பற்றி புகார் கொடுக்க அந்த புகாரின் பேரில் திருட்டு விசிடி சிறப்பு ஆய்வாளர் ஜெயலட்சுமியின் அணையின்படி ஆய்வாளர்கள் நந்தகுமார் மற்றும் மகேந்திரன் இருவரும் மதுரவாயில் அருகே அந்த பேருந்தை மடக்கிப் பிடித்து அந்த பேருந்தை ஓட்டிய ஓட்டுனரை கைது செய்திருக்கிறார்கள்.
சிங்கம் களமிறங்கிடுச்சே….!!!