அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் யூடியூப் தளத்தில் வெளியாகி இன்றுவரை டிரெண்ட்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது.
ஏற்கனவே இந்தப்படம் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் காமெடி, செண்டிமெண்ட் எல்லாம் கலந்த கலவையாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், விஸ்வாசம் படத்தின் கதை பற்றிய ரகசியம் தற்போது கசிந்திருக்கிறது.
மதுரை மாவட்டம் தேனியில் பெரிய தாதாவாக இருப்பவர் அஜீத். வெட்டி வம்புக்குப் போகாமலும், அதே நேரத்தில் வந்த சண்டையை விடாமலும் இருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு தவிர்க்க முடியாமல் ஒரு சண்டை வருகிறது. அதனால் அவருக்கு மனைவியின் பிரசவ நேரத்தில் கூட அருகில் இருக்க முடியாதளவுக்கு சூழல் வருகிறது. வந்த சண்டையை விட முடியாமல் எதிர்கோஷ்டியினரிடம் மோதி அவர்களை அடித்து துவம்சம் பண்ணி விட்டு மருத்துவமனைக்கு வருவதற்குள் அத்தனை அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.
ஆமாம், பிரசவத்தில் குழந்தை இறந்து விடுகிறது. கண் கலங்கும் மனைவி நயன்தாரா அஜீத்தை பிரிந்து எங்கேயோ சென்று விடுகிறார். மீண்டும் 12 வருஷம் கழித்து மனைவியை மும்பையில் சந்திக்கும் அஜீத், இறந்து போய்விட்டதாக கூறப்பட்ட பெண் குழந்தை உயிரோடு இருப்பதை கண்டு சந்தோஷப்படுகிறார்.
விளையாட்டில் சுட்டியாக இருக்கும் மகள், பெரிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கிற சூழலில் வில்லனின் மகளும் அதே போட்டியில் போட்டியாளராக மாணவியாக களம் இறங்குகிறார். வேறு வழியில்லை. அஜீத் மகளை கொன்றுவிட்டால் தன் மகளுக்கு வெற்றி உறுதி என்று நினைக்கும் வில்லன் அதற்கு முயல, அவனிடமிருந்து தன் செல்ல மகளை அப்பா அஜீத் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே க்ளைமாக்ஸாம்.
படத்தில் எக்கச்சக்க நட்சத்திரப் பட்டாளம் இருப்பதால் இந்தப் பொங்கல் அஜீத் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் விஷுவல் விருந்தாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.