” மிகச்சிறந்த நடிகை, அவருடைய திறமையை தமிழ்சினிமா பெரிதாக பயன்படுத்திக் கொள்ளவில்லை” தன் படங்களில் நடிக்கும் கதாநாயகிகளை பாராட்டும் போது பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இப்படித்தான் பாராட்டுவார்கள். அதைத் தாண்டி நெருங்கிய உறவோடு பாராட்டுவது என்பது அரிதிலும், அரிதாகத்தான் நடக்கும்.
சமீபத்தில் சவரக்கத்தி பத்திரிகையாளர் சந்திப்பில் பூர்ணாவை தனது மகள் அவளை ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து சினிமாவில் வழி நடத்துவேன் என்று பெருமையோடு சொன்னார் இயக்குநர் மிஸ்கின். அப்படி ஒரு அரிதிலும் அரிதான பாராட்டு நடிகை சஞ்சிதா ஷெட்டிக்கும் கிடைத்தது. அதுவும் பாராட்டியது ஒரு பெண் தயாரிப்பாளர் என்பது தான் கூடுதல் விசேஷம்.
‘யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் சுபா தம்பி பிள்ளை தயாரித்துள்ள படம் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’. ஏஆர் ரெஹானா இசையமைத்து, படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கிறார். புதுமுகம் அசார், சஞ்சிதா ஷெட்டி மற்றும் யோகிபாபு நடித்திருக்கும் இந்த படம் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகிறது. அதையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ரகுமான் ”தயாரிப்பாளர் யோகி, சுபா இருவரையும் 20 வருடங்களுக்கும் மேலாக எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பர்கள். என்னை பார்க்கும் போதெல்லாம் ஒரு படம் பண்ணனும் என சொல்லிட்டே இருப்பாங்க. நான் தான் சினிமா ரிஸ்க், வேணாம்னு சொல்லிட்டே இருந்தேன்.
பின் ஒரு நாள் ரெஹானா மேடம் வழிகாட்டுதலில் படத்தை துவங்கியதாக சொன்னார்கள். கதை ரொம்ப நல்லா இருந்துச்சி. எனக்கும் திருப்தியாக இருந்தது. பாடல்களும், ஒரு சில காட்சிகளும் பார்த்தேன், சிறப்பாக வந்திருக்கிறது. எல்லோரையும் ஈர்க்கும் தலைப்பாக அமைந்துள்ளது. ரெஹானாவின் இசை படத்துக்கு பக்க பலமாக அமைந்துள்ளது. ‘துருவங்கள் 16’ படத்தை போலவே இதுவும் முழுக்க புதுமுகங்கள் நடித்த படமாக இருந்தாலும் அதே போலவே பெரிய வெற்றியை பெறும் என்றார்.
படத்தின் ட்ரைலர் மாதிரியே மொத்த படமும் ரசிகர்களை சிரிக்க வைக்கும். ரெஹானா மேடம் படத்துக்கு பெரிய பில்லர். தயாரிப்பாளர்கள் யோகி, சுபா இருவரும் நினைத்திருந்தால் பிரபலமான நடிகர்களை நடிக்க வைத்திருக்கலாம், ஆனால் எங்களை நம்பி படத்தை தயாரித்திருக்கிறார்கள். புதுமுகமான எனக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்க ஒப்புக் கொண்டது பெரிய விஷயம் என்றார் நாயகன் அசார்.
என் முதல் படத்திலிருந்தே மீடியா எனக்கு பெரும் ஆதரவை கொடுத்து வருகிறது. ஒவ்வொரு படத்தையும் முதல் படமாக தான் நினைத்து நடித்து வருகிறேன். அசார் ரொம்ப திறமையான நடிகர். ரெஹானா இசையில் வச்சி செய்றேன், அம்மா பாடல் என சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார். ஒரு பெண் தயாரிப்பாளரின் படத்தில் நடித்தது புது அனுபவம். இந்த தலைப்பு பலரையும் படத்தை பற்றி பேச வைத்துள்ளது என்றார் நாயகி சஞ்சிதா ஷெட்டி.
நான் கனடா போனபோது ஒரு படம் பண்ணலாம்னு சொன்னாங்க சுபா. ஒரு பட்ஜெட் கொடுத்தேன். சென்னை வந்தப்புறமும் அவங்க கேட்டுட்டே இருந்தாங்க. நானும் நிறைய பேரை பார்த்தேன். அதில் கிடைத்தவர் தான் விக்னேஷ் கார்த்திக். காமெடி படம் தான் பண்ணலாம்னு நினைச்சிருந்தேன், அவர் சொன்ன கதையும் ரொம்ப நல்லாவே இருந்தது. அசார் எனக்கு முன்னாடியே அறிமுகமானவன், விக்னேஷ் கார்த்திக் கிட்ட சொன்னப்போ அவரும் அசார் என் நண்பன் தான், எனக்கு ஓகேன்னு சொன்னார். சஞ்சிதா ஷெட்டி, சிங்கப்பூர் தீபன், ஈடன், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிச்சிருக்காங்க. காமெடிக்கு பஞ்சமில்லை என்றார் இணை தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளருமான ஏஆர் ரெஹானா.
பின்னர் பேச வந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான சுபா தம்பி பிள்ளை ”இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், ஹீரோ அசார், ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டி மூணு பேருமே என் பிள்ளைகள் மாதிரி தான் என்று சொல்லியதும், மேடையில் இருந்த சஞ்சிதா ஷெட்டி தயாரிப்பாளரை கையெடுத்துக் கும்பிட்டு நன்றி தெரிவித்தார். முதல் தடவை விக்னேஷ் கார்த்திக்க பார்த்தப்போ ரொம்ப சின்ன பையனா இருக்காரே, இவர் எப்படி படத்தை இயக்குவார்னு சந்தேகமா இருந்துச்சி. முதல் நாள் ஷூட்டிங்கிலேயே எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். நாயகன் அசார் மாத்திட்டு வேற ஹீரோ புக் பண்ண நினைச்சேன், ஆனால் அசார் மிகவும் திறமையானவர் என்பதை நிரூபித்தார். சூது கவ்வும் நாயகி சஞ்சிதா ஷெட்டி தான் நாயகின்னு சொன்னதும் உடனே புக் பண்ண சொல்லிட்டேன்” என்றார்.
சேஃபா ஒரு காமெடி படம் பண்ணலாம்னு தயாரிப்பாளர்கள் நினைக்குறப்ப, ஒரு வித்தியாசமான படத்தை பண்ணலாம்னு முன்வந்த தயாரிப்பாளர்களுக்கும், ரெஹானா மேடத்திற்கும் நன்றி. கல்லூரிக்கு போகும் ஒரு நாயகனா அசார் கிடைச்சிருக்காரு. சஞ்சிதா ஷெட்டி ரொம்ப சின்சியரான நடிகை, ஒரு நாள் கூட அவரால் படம் தாமதமானது கிடையாது. சிங்கப்பூர் தீபனுக்கு ஏன் பெரிய பிரேக் கிடைக்கலனு தெரில. இந்த படத்துல அவருக்கு நல்ல பேரு கிடைக்கும். கவிராஜ் என்ற உதவி இயக்குனர் சொன்ன தலைப்பு தான் இந்த ஏண்டா தலைல எண்ண வைக்கல. பல பேருக்கு படத்தை கொண்டு போய் சேர்த்ததே இந்த தலைப்பு தான்னு சொல்லலாம் என்றார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.
சந்திப்பில் ஒளிப்பதிவாளர் வம்சி தரன் முகுந்தன், எடிட்டர் சிஎஸ் பிரேம், தயாரிப்பாளர் யோகி தம்பி பிள்ளை, ஸ்டுடியோ 9 விஜித் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.