இமான் அண்ணாச்சி சவால் : சிரிக்கலேன்னா 1 லட்சம் பரிசு!
‘கோடை மழை’ என்ற வார்த்தையைக் கேட்டதும் ஏதோ கோடை காலத்தில் பெய்யும் மழையைத் தான் குறிக்கும். தெற்கத்தி ஊர்கள்ல விவசாயிகள் கோடை மழையை எதிர்பார்க்கிறது வழக்கம். ஆனால் நாங்க வெச்சிருக்கிற கோடை மழை டைட்டிலுக்கு அந்த அர்த்தம் இல்லை என்றார் அறிமுக இயக்குநர் கதிரவன்.
அதாவது படத்தோட முதல் பாதி முழுவதையும் கோடை காலத்தில் நடப்பது போலவும், இரண்டாம் பாகம் முழுவதும் மழைக்காலத்தில் நடப்பது போலவும் படமாக்கியிருக்கிறோம். அந்த அர்த்தத்தில் தான் படத்துக்கு இப்படி ஒரு டைட்டிலை வைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
யாழ் தமிழ்த்திரை என்ற பட நிறுவனம் சார்பில் அலெக்சாண்டர் தயாரிக்க, புதுமுகம் கண்ணன் மற்றும் கங்காரு பிரியங்கா, இயக்குநர் களஞ்சியம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க, எழுதி இயக்கும் கதிரவன் நடிகர் பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராக வேலை செய்தவராம்.
“ஹீரோ ஒரு ராணுவ வீரர். அவர் தன்னோட சொந்த ஊரான, திருநெல்வேலியில் உள்ள சங்கரன் கோவிலுக்கு கோடைக்கு ஒருமுறை, மழைக்காலத்தில் ஒருமுறை என்று இரண்டு தடவைகள் வந்து போகிறார். அப்போது நடக்கும் சம்பவங்கள் தான் திரைக்கதையாக்கியிருக்கிறேன். அதே ஊரில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் இயக்குநர் மு.களஞ்சியத்துக்கும் ஹீரோவுக்குமிடையே ஏற்படும் உரசல்கள் பற்றிய கதை இது. அப்போ களஞ்சியம் தான் வில்லனான்னு நீங்க கேட்கலாம். படத்துல வில்லன்னு யாருமே இல்லை. யாரையுமே கெட்டவங்களா காட்டல. அவங்கவங்க நிலையில அவங்க எடுக்கிற முடிவு தான் படமே” என்று சஸ்பென்ஸ் வைக்கிறார் இயக்குநர்!
பொதுவா திருநெல்வேலி பாஷைன்னாலே படங்கள்ல ‘ஏலே…’, ‘வாலே…’ , ‘போலே……’ங்கிற வார்த்தைகளோட நிறுத்திடுறாங்க… அதையும் தான் இன்னும் நுணுக்கமா இப்போ அந்த ஊரோட சுத்து வட்டாரத்துல எப்படி பேசுறாங்கங்கிறதை டைரக்டர் படத்துல காட்டியிருக்கிறார். முதல் ரெண்டு நாட்கள் டைரக்டரைப் பார்க்கிறப்போ எனக்கு அவர் மேல நம்பிக்கை வரல.
அடுத்தடுத்த நாட்கள்ல அவரோட இயக்கத்துல நடிக்கிறதே எனக்கு கஷ்டமா இருந்துச்சு. சில நேரங்கள்ல பத்து தடவைக்கு மேல ஒரு சீனுக்கு டேக் வாங்கியிருக்கிறேன். இயக்குநர் நம்மகிட்ட எதிர்பார்க்கிறது நடிப்பை இல்லை. நம்மளோட அன்றாட வாழ்க்கையை முறையை பிரதிபலிக்கணும்கிறதைத் தான்ங்கிறதை அப்புறம் தான் தெரிஞ்சுக்கிட்டேன்.
அப்புறம் எனக்கு நடிக்கிறது ரொம்ப ஈஸியா இருந்துச்சு. சீன்களைப் போட்டுப் பார்த்தப்ப எனக்கு இயக்குநரோட திறமை மேல அபார நம்பிக்கை வந்துச்சு என்றவர் அடுத்து சொன்னது தான் இந்தப்படத்தை ரசிகர்கள் பார்த்தே தீர வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுவது!
80 களில் நல்ல நல்ல வாழ்வியல் படங்களைத் தந்த மகேந்திரன், பாலு மகேந்திரா போன்ற இயக்குநர்கள் வரிசையில் இடம்பெறக் கூடிய அளவுக்கு இந்தப்படத்தை மிகவும் யதார்த்தமாக எடுத்திருக்கிறார் இயக்குநர். கதிரவனுக்கு அந்த வரிசையில் கண்டிப்பாக இடம் கிடைக்கும்.
அப்புறம் இன்னொரு விஷயம் படத்துல காமெடி பண்றது ‘இமான் அண்ணாச்சி’ தானாம். இந்தப்படத்துல காமெடி சீன்களுக்கு எந்த ரசிகராவது எனக்கு சிரிப்பே வரலேன்னு சொல்லி சிரிக்காம இருந்தா சொல்லுங்க நான் அவங்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு தர்றேன் என்று சவால் விட்டிருக்கிறாராம்.
அந்தளவுக்கு காமெடி தூக்கலா இருக்குமாம்!