பிரபுசாலமனிடம் இருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிஜ சினிமா
மலையில் வாழ்ந்து வரும் கோவை சரளாவிற்கு செம்பி என ஒரு பேத்தி. தாய் தந்தையாக இருந்து அந்தப்பேத்தியை வளர்த்து வருகிறார் சரளா. பேத்தி செம்பிக்கு அதிகார மட்ட இளைஞர்களால் ஓர் அநீதி நடக்கிறது. அநீதியை எதிர்த்து நீதிப்போராட்டம் நடத்துகிறார் கோவை சரளா. அஸ்வின் அதற்கு பெரும் கரம் நீட்டுகிறார். இவ்வளவு தான் கதை
இந்தக் கதையின் ஆழம் உணர்ந்து நடித்துள்ளார் கோவை சரளா. பத்துப் பக்கங்கள் வசனம் பேசி வெளிப்படுத்த வேண்டிய உணர்ச்சிகளை ஒருசில க்ளோசப் ஷாட்களிலே காட்டிவிடுகிறார். செம்பியாக வரும் சிறுமி நிலா காட்டியிருக்கும் நடிப்பு மனதை உலுக்கும் ரகம். அஸ்வினுக்கு இந்தப்படம் நல்ல அடையாளம் எனலாம். தம்பி ராமையா, பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட மற்றவர்கள் நடிப்பிலும் எதார்த்தம் தெரிகிறது
எம்.ஜீவனின் ஒளிப்பதிவு கொடைக்கானல் மலையழகை அள்ளி வந்திருக்கிறது. ஓடும் பஸுக்குள்ளே பயணிக்கும் பின்பாதியை தன் சாமர்த்தியத்தால் நன்றாக நகர்த்தியிருக்கிறார். நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை முன்பாதியில் ஓவர் இரைச்சல். பின்பாதியில் ஓகே.
அஸ்வின் & பஸ் டீம் செம்பியின் நீதிக்காக எடுக்கும் முயற்சிகளில் லாஜிக் துளியும் இல்லாததால் எமோஷ்னல் சரியாக கூடிவரவில்லை. சிறுமிகளின் மீதான பாலியல் கொடுமைகளுக்காக இப்படியான குரல் அவசியம் தேவை என்ற விசயத்திற்காக மட்டும் செம்பியை நாம் வரவேற்கலாம்
3/5