தமிழே தெரியாத நடிகைகள் கோலோச்சும் தமிழ்சினிமாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப்பெண் கதாநாயகியாக வளர்வதென்பது அரிதிலும் அரிது. அதிலும் அழகான தமிழ் பேச தெரிந்தவர் என்பது அதனினும் அரிது.. இவை இரண்டும் இருந்தாலும் நடிப்புத் திறமை இருப்பது அரிதினும் அரிது..
ஆனால் இந்த மூன்று முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கி சினிமாவில் ஜெயிக்கத் தேவையான சகல திறமைகளையும் உள்ளடக்கிய அழகான தமிழ்ப்பெயருடன் வசீகரிக்கும் கண்களுடன் சினிமாவுக்கு கிடைத்துள்ள நாயகி தான் ‘வெண்பா.’
சமீபத்தில் வெளியான ‘காதல் கசக்குதையா’ படத்தில் முக்கால்வாசி நேரம் ஸ்கூல் யூனிபார்மிலேயே நடித்திருந்த இந்த வெண்பா கதையின் நாயகியாக, கதைக்குள் இருக்கும் பிரச்சனையை படம் முழுதும் தனது அற்புதமான நடிப்பால் தூக்கி சுமந்திருந்தார். பள்ளிப் பருவத்திலேயே காதலிக்கத் தொடங்குவது எனபது சமூகத்தின் பார்வையில் தவறு தான் என்றாலும், அந்தக் காதலை படத்தில் இவர் பக்குவத்துடன் அணுகும் விதம் அழகோ அழகு..
அந்த வெண்பா தான் மீண்டும் ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து பள்ளி மாணவனுடன் காதல் செய்ய தயாராகி விட்டார். ஆமாம்… இசையமைப்பாளர் சிற்பி மகன் நந்தன் ராம் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் வெண்பா தான் கதாநாயகி. காதல் கசக்குதய்யா படத்தில் வளா வளாவென்று பேசிக்கொண்டே இருந்தவர் இந்தப்படத்தில் பேசவே மாட்டாராம்.
”இரண்டாவது படமும் ஒரு பள்ளிக்கூடம் சம்பந்தப்பட்ட கதை என்றாலும் என்னுடைய கேரக்டரில் நெறைய வித்தியாசங்களை ரசிகர்கள் பார்ப்பார்கள். அதற்காகவே இந்தப் படத்திலும் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன்” என்றவரை பிரபல இயக்குநர் விக்ரமன் ”வெண்பா என்ற தமிழ்ப்பெயரை வைத்ததற்காகவே நீங்கள் தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக வருவீர்கள்” என்று ‘பள்ளிப் பருவத்திலே’ படத்தின் ஆடியோ விழாவில் மனம் திறந்து பாராட்டியதை பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்.
அந்த வகையில் நடிப்பதற்கு வாய்ப்புள்ள படங்களையும் கேரக்டர்களையும் மட்டுமே தேர்ந்தெடுக்கும் வெண்பா தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என நம்பலாம்.