விஜய் சேதுபதி படத்திலிருந்து அமலாபால் நீக்கம் ஏன்?

ஸ்.பி ஜனநாதனிடம் உதவியாளராக பணியாற்றிய ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதுப்படத்திலிருந்து அமலாபால் நீக்கப்பட்டிருக்கிறார்.

அவருக்குப் பதிலாக மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கப் போகிறார் என்கிற தகவல் வெளியான நிலையில் அந்தப் படத்திலிருந்து தான் ஏன் நீக்கப்பட்டேன் என்கிற கேள்வியோடு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அமலாபால்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, ”விஜய்சேதுபதி படத்தில் இருந்து நான் விலகவில்லை. ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லி பட நிறுவனமே என்னை நீக்கி உள்ளது. நான் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டை இதுவரை என்னுடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள் யாரும் சொன்னது இல்லை. நான் எல்லா தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஆதரவாகவே இருந்து இருக்கிறேன்.

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் நடித்த போது அந்தத் தயாரிப்பாளருக்கு பணப்பிரச்சனை ஏற்பட்டது. அவருக்காக என் சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக் கொடுத்தேன். ‘அதோ அந்த பறவை போல’ படப்பிடிப்பில் எனக்கு ஹோட்டல் ரூம் கொடுக்கப்படவில்லை. அங்கு ஒரு சிறிய வீட்டில் தான் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.

‘ஆடை’ படத்தில் லாபத்தில் பங்கு தந்தால் போதும் என்று குறைந்த முன்பணம் மட்டும் வாங்கிக்கொண்டு நடித்தேன். தற்போது விஜய் சேதுபதி படத்தில் நடிக்க நீங்கள் விதிக்கும் நிபந்தனையை ஏற்க முடியாது. எனவே நீங்கள் தேவை இல்லை என்று தயாரிப்பாளர் ரத்னவேலு எனக்கு தகவல் அனுப்பி உள்ளார். நான் ஊட்டியில் தங்க ஏற்பாடு செய்யும்படி கேட்டதை இப்படி சொல்கிறார்.

ஆனால் உண்மையில் ‘ஆடை’ படத்தின் ட்ரெய்லரை பார்த்த பிறகே என்னை படத்திலிருந்து நீக்கும் முடிவை எடுத்துள்ளனர். இது ஆணாதிக்க, அகந்தையான மனநிலையை காட்டுகிறது. இந்த விஷயத்தில் விஜய்சேதுபதியை காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. நான் இப்போதும் அவருடைய ரசிகை தான்” என்று வருத்தத்தோடு கூறியிருக்கிறார் அமலாபால்.

Amala PaulMovie NewsVijay Sethupathi
Comments (0)
Add Comment