பார்த்திபன் ஹீரோவா? – அதிர்ச்சியடைந்த பாரதிராஜா

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ‘ஒற்றை செருப்பு’ படத்திற்கான அங்கீகாரம் மற்றும் சான்றளிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

பாரதிராஜா, பாக்கியராஜ் போன்ற சாதனையாளர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், இந்திய சாதனை மற்றும் ஆசிய சாதனைகளை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் விவேக் பங்கு பெற்று, பார்த்திபனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, ”படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் என்னைப் பேச அழைக்காதீர்கள் படத்தைப் பற்றி நான் நீண்ட கடிதம் ஒன்றை உங்களுக்கு பிறகு எழுதுகிறேன் என்றேன். காரணம் இன்னமும் என்னால் படத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை.

தனி ஒரு ஆள் மட்டும் கால் மணி நேரமோ அரை மணி நேரமோ திரையில் தோன்றி நடிக்கலாம். ஆனால் சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் முழு படத்திலும் தோன்றுவதெல்லாம் விளையாட்டு விஷயமில்லை. அதையும் மிக அற்புதமாக செய்திருக்கிறார் பார்த்திபன்.

யார் வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்கலாம், யாரை வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்க வைக்கலாம் என்று சொல்லும் நானே, புதிய பாதையில் பார்த்திபன் நாயகனாக நடிக்கிறார் என்பது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். புதிய பாதையில் தன்னை நிரூபித்த பார்த்திபன் இன்று நடிப்பில் புதிய பரிமாணங்களைத் தொட்டிருக்கிறார்.

உனக்கு உரிய உயரத்தை நீ இன்னும் அடையவில்லை என்று நான் பார்த்திபனிடம் அடிக்கடி சொல்வேன். ஒற்றை செருப்பு படம் மூலம் உலகத்தையே தமிழ்ப்படங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் பார்த்திபன்” என்றார்.

BharathirajaMovie NewsOththa Seruppu Size 7Parthiban
Comments (0)
Add Comment