கிஷோர் பி பெலேகர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஜீ ஸ்டுடியோவின் ‘காந்தி டாக்ஸ்’ படம் நவம்பர் 21ஆம் தேதி கோவா 54வது ஐஎஃப்எஃப்ஐ விழாவில் திரையிடப்பட்ட முதல் சைலண்ட் மூவி என்ற பெருமையைப் பெற்றது. விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சுவாமி மற்றும் சித்தார்த் ஜாதவ் உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். கோவா 54வது ஐஎஃப்எஃப்ஐ விழாவில் திரையிடப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம், சினிமா மீது ஜீ ஸ்டுடியோஸூக்கு உள்ள அர்ப்பணிப்பை எடுத்து காட்டுவதாகவும் உள்ளது.
கோவாவின் இந்தத் திரைப்பட விழாவில் ‘காந்தி டாக்ஸ்’ திரையிடப்பட்டது குறித்தும், தனது ஒலிப்பதிவு அனுபவம் குறித்தும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்து கொண்டதாவது, “இசையமைப்பாளராக இந்தத் திரைப்படம் எனக்குக் கிடைத்த பரிசு. இந்தப் படத்தில் எனக்கான கிரியேட்டிவ் வேலையை அங்கீகரித்து, எனக்கான சுதந்திரத்தை கிஷோர் அளித்தார். இந்தப் படத்தில் நான் விரும்பி, ரசித்து வேலை செய்தேன். தேவைப்படும் போதெல்லாம் இசையை ஆக்கப்பூர்வமாக மாற்றியமைத்தேன். இந்த படம் எனது ஷோரீல்” என்றார்.
படம் குறித்து விஜய் சேதுபதி, “இந்தக் கதை ஒரு கதாபாத்திரத்தின் நீதி தேடுவதில் இருந்து ‘காந்தி’யை கண்டுபிடிப்பது வரையிலான பரிணாமத்தைக் காட்டுகிறது. இது எங்களுக்கு சவாலான படமாக இருந்தது. கிஷோர் என்ன நினைக்கிறாரோ அதை திரையில் கொண்டு வர என்னால் முடிந்த ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். மதம், மொழி போன்றத் தடைகளைத் தாண்டிய விஷயமாக இந்தப் படம் அமைந்ததால் இதை நான் தேர்ந்தெடுத்தேன் மற்றும் ஒரு நடிகராக நான் எனது பாத்திரத்திற்கு என நடிப்பால் நியாயம் சேர்க்க முயன்றிருக்கிறேன்” எனக் கூறினார்.