கல்கி2898 AD- விமர்சனம்

அரசியல் பேசாமல் விஷுவல் பேசியிருக்கும் ஒரு ஆன்மிக சினிமா

ஹீரோ பிரபாஸ், கமல் வானத்திற்கு கீழ் படைத்து வைத்துள்ள காம்பளக்ஸ் என்ற உலகத்திற்குள் போவதற்காக பணம் சேர்க்கிறார். அதற்காக என்ன வேலை வேண்டுமானாலும் செய்வார். யாரை வேண்டுமானாலும் அடிப்பார். ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க ஆசைப்படும் தீபிகாவை கமலிடம் பிடித்துக் கொடுத்து அந்தச் சலுகை மூலமாக காம்ப்ளக்ஸுக்குள் போக நினைக்கிறார். சரி தீபிகா வயிற்றில் வளரும் குழந்தை யார்? அவர் பரமாத்மா. யெஸ் கதை என்னன்னா, “பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மஹாபாரதப் போரின் முடிவில் பகவான் கிருஷ்ணன் என்ன சொல்வார்? அதர்மம் தலை தூக்கும் போது வருவேன் என்பாரா? 2898-ல் நடக்கும் இந்தக் கதையில் அதர்மம் உச்சத்தில் இருக்கிறது. அதனால் பகவான் தீபிகா படுகோன் வயிற்றில் கருவாகிறார். அதைத் தாக்க பிரபாஸும், அதைக் காக்கா அமிதாப் பச்சனும் முயல, முடிவு என்ன என்பதாக கதை விரிகிறது

கமல் இரண்டே காட்சியில் தான் வருகிறார். அதிலும் ஒரு காட்சியில் அவரின் குரலை வைத்து தான் அது அவர் என்று முடிவு செய்ய முடிகிறது. அடுத்து பிரபாஸ் சுத்தம். ஒரு படத்தில் ஹீரோ வரும் போர்ஷன் மட்டும் மொக்கையாக இருந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது அவரின் நடிப்பும். அமிதாப் பச்சன் மட்டுமே படத்தின் பெருந்தூண். அவர் வரும் காட்சிகள் மட்டுமே மாஸ். பசுபதி, உள்ளிட்ட வேறு யாரும் பெரிதாக மனதில் பதியவில்லை

இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆன்மிக காட்சிகளுக்கும், சண்டைக்காட்சிகளுக்கும் சிறப்பாக இசை அமைத்துள்ளார். கேமராமேன் நல்ல உழைப்பை போட்டுள்ளார். உலகத்தர விஷுவல்ஸ் பல இடங்களில். சிஜி டீம் ஸ்பெசல் எபெக்ட் போட்டு உழைத்துள்ளனர். டெக்னிக்கலாக படம் மிரட்டல்

கதையும் திரைக்கதையும் சுறா குருவி ரேஞ்சிற்கு சோதிக்கிறது. மக்களை காக்கும் ஹீரோவே ஜீரோவாக தெரியும்படியாகவா திரைக்கதை அமைப்பது. இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளை ஆழமாக விதைத்தாலும் அதில் வன்மம் இல்லை என்பது ஆறுதல். இன்னும் வலுவான எழுத்து அமைந்திருந்தால் கல்கி அவதாரத்தை மெச்சிருக்கலாம்
2.75/5

Actor Prabhasdirector Nag AshwinKalki2898AD movie