சமந்தா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
முன்னதாக இப்படத்தில் இடம்பெறும் ஒரு கெளரவத் தோற்றத்தில் யாரை நடிக்க வைப்பது? என்று யோசித்திருக்கிறார் இயக்குனர் பொன்ராம்.
பின்னர் சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’ படங்களில் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷிடம் கேட்டுப் பார்ப்பது என்று முடிவுக்கு வந்திருக்கிறது படக்குழு.
சமீபத்தில் வெளியான பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அவருக்கு பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது.
நயன்தாராவைப் போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிற உயரத்துக்கு போய்விட்ட இந்த நேரத்தில் அவரிடம் கெளரவத் தோற்றத்தில் நடிக்கக் கேட்பது சரியாகுமா? என்று கூட யோசித்திருக்கிறார்கள்.
இருந்தாலும் ஒருமுறை கேட்டுப் பார்த்து விடுவோமே என்று சீமராஜா படக்குழு சார்பில் கீர்த்தி சுரேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நாட்களில் இன்ப அதிர்ச்சி தரும் தகவலை சொல்லியிருக்கிறார் கீர்த்தி.
ஆமாம், கெளரவத் தோற்றம் என்றாலும் எனக்கு தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த ஹீரோ சிவகார்த்திகேயன். அவருக்காக இந்தப் படத்தில் கெளரவத் தோற்றத்தில் நடிக்க சம்மதிக்கிறேன் என்று தெரிவித்து நடிக்கவும் சம்மதம் சொல்லியிருக்கிறார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் ‘சாமி 2’, விஜய் 62, ‘சண்டக்கோழி 2’ என பிஸியாக நடித்து வந்தாலும் சீமராஜாவில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க சம்மதித்திருப்பது திரையுலகில் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.