RATING : 3/5
நல்லதே நினை நல்லதே நடக்கும் என்ற பழைய பாடத்தை புதிய வடிவில் பேசி இருக்கும் படம் பஞ்சராக்ஷரம். வெவ்வேறு துறை சார்ந்த மனநிலை கொண்ட ஐந்து நண்பர்களுக்கு ஒரு ட்ரிப்பின் போது பஞ்சராக்ஷரம் என்று ஒரு முனி எழுதிய புத்தகம் கிடைக்கிறது. அந்தப் புத்தகத்தின் பக்கங்களில் எழுதி இருப்பது போலவே அவர்கள் வாழ்வில் சில விசயங்கள் நடக்கிறது. அதில் தலையாய பிரச்சனையாக ஐவரில் ஒரு பெண் கொடூர வில்லனால் கடத்தப்படுகிறாள். அவளைக் கண்டுபிடிப்பதற்கான தீர்வும் அந்தப் புத்தகத்தில் இருக்கிறது. நால்வரும் ஒன்றிணைந்து தங்கள் தோழியை எப்படி மீட்டு வந்தார்கள் என்பது தான் கதை.
கதையில் ஐடியா அட்டகாசம். கதைகளுக்கான லைன் பிடித்ததில் ஈர்த்த இயக்குநர் கேர்க்டரேசனிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். இசைக் கலைஞனாக வரும் கோகுல் கேரக்டரின் வீரியம் சந்தோஷ் பிரதாப் கேரக்டரிலும் இருந்திருக்கலாம். மீதுமுள்ள மூவரில் சனா ஆல்டப், அஸ்வின் ஜெரோம், மதுஷாலினி ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள். ஹீரோவான சந்தோஷ் பிரதாப்பை விட வில்லன் சீமான் மிரட்டுகிறார். குறிப்பாக அவர் பேசும் வசனங்கள் எல்லாம் வெறித்தனம்.
பின்னணி இசை தான் இப்படத்தின் ஜீவநாடி. ஒரு பக்கா க்ரைம் திரில்லரை இசைவழியே கடத்தி இருக்கிறார் இசை அமைப்பாளர் சுந்தரமூர்த்தி. ரகசியம் என்ற நூல் இந்தக்கதைக்கான அடிப்படை என்பதை இயக்குநர் பாலாஜி வைரமுத்து தெரிவித்து இருந்தார்.
எண்ணமே வாழ்க்கை என்பது தான் ரகசியம் நூலின் சாராம்சம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். அதனால் நல்லதே நினைப்போம். என்ற கருத்தை படம் வலியுறுத்தியுள்ளது.
இந்த உலகில் உச்சபட்ச நல்லவரிடமும் ஒரு கெட்டது இருக்கும். உச்சபட்ச கெட்டவரிடமும் ஒரு நல்லது இருக்கும் என்ற எதார்த்தத்தையும் இயக்குநர் படத்தில் பேசியுள்ளார். படம் நெடுக சிவனின் தாக்கம் அதிகம் இருக்கிறது. அதேநேரம் மதத்தையும் தூக்கிப்பிடிக்கவில்லை. அதுதான் இப்படத்தின் ரைட்டிங் டெப்த்.
திங் பாசிட்டிவ் என்ற மேட்டருக்காக பஞ்சராக்ஷரம் படத்திற்கு பச்சை விளக்கு காட்டலாம்.