நடிகர் விஷாலின் அலுவலகத்தில் சில வாரங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற் கொண்டனர்.
அப்போது ‘மெர்சல்’ விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவை விஷால் கடுமையாக விமர்சித்ததால் தான் இப்படிப்பட்ட சோதனை மத்திய அரசால் நடத்தப்பட்டது என்று பலரால் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் அந்த ஐடி ரெய்டில் என்னென்ன சிக்கின என்பது பற்றிய எந்த விபரங்களையும் வருமானவரித்துறை முழுமையாக வெளியிடவில்லை. அதேநேரம் ஜி.எஸ்.டி வரியை முறையாக செலுத்துகிறாரா என்று ஆய்வு செய்ய மட்டுமே சென்றதாகவும் கூறப்பட்டது.
இந் நிலையில், ”விஷாலிடம் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் வெளிவராத வீடியோ” என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், ரூ.2000 நோட்டுக்கள் கொண்ட பண கட்டுக்குள் பத்துக்கு பத்து அறை அளவுக்கு அடிக்கி வைக்கப்பட்டிருக்க, ”என்ன சார் இது? இவ்வளவு பணம் எப்படி வந்தது?” என்று விஷாலிடம் அதிகாரிகள் அதிர்ச்சியோடு கேட்கிறார்கள், அதற்கு விஷாலோ “நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்” என்று கூறுகிறார்.
பின்னர் அதே வீடியோவில் தோன்றும் நடிகர் அர்ஜூன் இதெல்லாம் படத்துக்காக அடிக்கப்பட்ட டம்மி நோட்டுகள் என்று சொல்ல எல்லோரும் சிரித்தபடியே வெளியேறுகிறார்கள்.
ஆமாம், விஷாலின் ‘இரும்புத்திரை’ படப்பிடிப்புக்காக அடிக்கப்பட்ட டம்மி ரூபாய் நோட்டுகள் தான் அவை. அந்த வீடியோவை படத்தின் புரமோஷனுக்காக விஷாலே வெளியிட்டிருக்கிறார்.
ஆனால் வீடியோவை முழுமையாகப் பார்க்காத சில அவசரக் குடுக்கைகள் ஐடி ரெய்டில் விஷால் அலுவலகத்தில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியதாக அந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.