இந்த மாதம் அக்டோபர் 18-ம் தேதி ரிலீசாகவிருப்பதையொட்டி நம்மை சந்தித்தனர் விஷால் உள்ளிட்ட படக்குழுவினர்.
நிகழ்ச்சியில் பேசிய விஷால் ”’சண்டக்கோழி’ எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். ‘இரும்புத்திரை’க்கு சிறப்பான இசையை தந்து படத்துக்கு வலு சேர்த்த யுவன் ஷங்கர் ராஜா, ‘சண்டக்கோழி 2’ வுக்கும் சிறப்பான இசையை தந்துள்ளார்.
‘சண்டக்கோழி 2’ திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படமாக இருக்கும். வெளியீட்டு தேதியை சொல்லிவிட்டு ஒரு படமெடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம். படக்குழுவுக்கு அது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இனிமேல் அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.
அப்போது அவரிடம் பரபரப்பாகப் பேசப்படும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு எதிரான பாடகி சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த விஷால் ”நான் எப்போதும் பாலியல் சீண்டல்களுக்கு எதிரானவன். METOOவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து கூற வேண்டும் என்று இல்லை. ட்விட்டர் என்பது ஒரு தொழிநுட்ப வளர்ச்சி. அது மற்றுமொரு சமூகவலைதளம். அங்கு தான் கருத்து கூற வேண்டும் என்று இல்லை. பத்திரிகையாளர்களை சந்தித்து என்னுடைய கருத்துகளை கூறலாம் என்று இருந்தேன்.
பாலியல் புகார் என்றால் அமலாபால் புகார் செய்தது போல் பாலியல் தொல்லைகள் நடப்பதற்கு முன்பே எங்களிடம் புகார் செய்ய வேண்டும். மலேசியாவில் ஒரு நடன நிகழ்ச்சியின் ஒத்திகை நடக்கும் போது அமலாபாலிடம் தவறாக பேசிய ஒருவரை பிடித்து வைத்து பின்னர் என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார். நானும் கார்த்தியும் உடனே அவரை கைது செய்ய இங்கிருந்தே எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம்.
அதேபோல் இதை போன்ற விஷயங்கள் நடப்பதற்கு முன்னரே எங்களை தொடர்பு கொண்டால் உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். பிரச்சனை நடந்து விட்டது என்று புகார் கொடுக்க நடிகர் ஒன்றும் காவல் நிலையம் அல்ல. பாலியல் புகார்களை விசாரிக்க மற்றும் அதை தடுக்க தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்” என்றார் விஷால்.