ஜிப்ஸி- விமர்சனம்

காத்திரமான கதை அம்சங்களோடு வரும் படங்கள் எப்போதும் ஒரு அதிர்வை ஏற்படுத்தும். அப்படி ஒரு அதிர்விற்கான முயற்சி தான் ஜிப்ஸி. மதவெறி எனும் கொடூர சிந்தனையை எளிய மக்களுக்குள் புகுத்தி தாங்கள் நினைத்தது நடந்ததும் அவர்களை கழட்டி விடும் கேவல அரசியலை புட்டு புட்டு வைத்துள்ளார் ராஜு முருகன்.
தேசாந்திரியாக தெருப்பாடகனாக தன் வாழ்வை கடத்தி வரும் ஜீவாவிற்கு நடாஷா மீது கண்டதும் காதல். நடாஷாவிற்கும் காதல். வீட்டில் இருந்து வெளியேறுகிறார் நடாஷா. ஜீவாவும் நடாஷாவும் மதம் கடந்து மனம் இணைந்து வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒரு கலவரம் வில்லனாக வருகிறது. அதன்பின் என்னானது என்பது தான் படமாக விரிகிறது.
மிகச்சிரத்தையோடு நிறைய காட்சிகளை கையாண்டுள்ளார் ராஜு முருகன். சென்சாரில் தப்பித்த காயங்கள் சில காட்சிகளில் அப்பட்டமாகத் தெரிகிறது. படத்தின் ஒளிப்பதிவு மிக அநாயசமாக இருக்கிறது. வடமாநில கலவரப் பூமியைக் காட்டும் போதும், நாகூரைக் காட்டும் போதும் கேமராமேன் புகுந்து விளையாடி இருப்பதை உணர முடிகிறது. அதேநேரம் பின்னணி இசையும் பாடல்களும் படத்தில் பெரிய ஏமாற்றம். பொலிட்டிகல் கலந்த எதார்த்த வசனங்கள் படத்தின் பெரும்பலம். வழக்கம் போல் ராஜுமுருகன் அதில் அசத்தி இருக்கிறார்.
மிக அவசிமானதொரு கருத்தியலைக் கொண்டுள்ள படம் தான். ஆனால் படத்தின் ஆதாரமான காதல் காட்சிகளில் போதிய அழுத்தம் இல்லை. குறிப்பாக நடாஷாவிற்கு ஜீவா மீது காதல் வந்ததிற்கான காரணத்தில் துளியும் எதார்த்தம் இல்லை. இடைவேளை வரை யார் காசு கொடுத்தாலும் பாடுவேன் என்று திரியும் ஜீவாவை இடைவேளைக்குப் பின் புரட்சிப் பாடகர் என்று புரஜெக்ட் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படத்தில் இருக்கும் கலை நேர்த்தியை விட ஒரு சாராரை குறை சொல்லும் விசயங்களே அதிகம் இருக்கின்றன. இருக்கும் குறைகளை அவசியம் சொல்ல வேண்டும் தான். ஆனால் அது சினிமாவாகவும் இருக்க வேண்டும் அல்லவா? ஜிப்ஸியில் இப்படியான இடியாப்பச் சிக்கல்
இ ருப்பதால் படத்தை சிகரத்தில் வைத்துக் கொண்டாட முடியாமல் ஜஸ்ட் லைக் தட் ஆகவே கொண்டாட முடிகிறது.
குறிப்பு:
முடிவில் வரும் ஒரு மேடைக்காட்சி ரத்தக்களத்தில் வடித்த பேரன்புக்கவிதை!
3/5