புதிய பிரபஞ்சத்தை பிரமாண்டமாக அறிமுகப்படுத்தும் ‘கல்கி 2898 AD’ படக் குழு!
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ எனும் திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஃபேண்டஸி சயின்ஸ் ஃபிக்சன் ஜானரிலான இந்தத் திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. அஸ்வினி தத், ஸ்வப்னா தத், பிரியங்கா தத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தியா முழுதும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வு சென்னையில் உள்ள பிவிஆர் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. அந்தத் தருணத்தில் படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத் கலந்துகொண்டு வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் ‘கல்கி 2898 ஏ டி ‘ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ” இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையிலும் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை வித்தியாசமாக வழங்குவதற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை கண்டு ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
ஜூன் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில்,” இந்த உலகத்தின் முதல் நகரம் என்றும் கடைசி நகரம் என்றும் காசி குறிப்பிடப்படுவது… குடிநீர் பிரச்சனை.. உலகத்தின் ஒரே கடவுளாக சுப்ரீம் யஸ்கின்… 6000 வருடத்திற்கு பிறகு ஒளிரும் சக்தி… அதைக் காக்க போராடும் அஸ்வத்தாமா.. சிருஷ்டியின் ஜனனம்… இதை தடுக்க நினைக்கும் கும்பல் … புஜ்ஜி என்ற வாகனத்துடன் அவர்களுடன் இணையும் பைரவா.. இருவருக்கும் இடையே நடைபெறும் போர்… பிறக்காத உயிருக்காக ஏன் இந்த இத்தனை அழிவு என எழுப்பப்படும் வினா… புதிய பிரபஞ்சம் உருவாகவிருக்கிறது என்ற முத்தாய்ப்பான வசனத்துடன் முன்னோட்டம் நிறைவடைகிறது.