நிஜமாகவே சாமியாடிய புதுமுக நடிகை! – படப்பிடிப்பில் அதிசயம்

Get real time updates directly on you device, subscribe now.

னுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘திருவிளையாடல் ஆரம்பம் 3’ ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே. புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான ‘பாண்டிமுனி’ படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடைபெற்றது.

இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கஸ்தூரி ராஜா.

படம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் அவரிடம் கேட்டோம்..

”இது பயங்கரமான ஹாரர் படம். சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப்பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த கதை உருவாக்கப் பட்டுள்ளது.

படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது ஆச்சர்யமான ஒரு சம்பவம் நடந்தது, பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப்பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக கும்பிடும் குட்டஞ்சாமி என்கிற கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சுமார் 700 வருஷமாகிறது என்று சிலர் சொல்கிறார்கள். சிலர் ஆயிரம் வருஷமாகிறது என்கிறார்கள்.

அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். அது குகைக்கோயில் மாதிரியான இடம். அங்கே நாங்கள் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தோம். அங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது. செருப்பு உபயோகிக்கக் கூடாது என்றார்கள். நாங்கள் வருத்தம் தெரிவித்து விட்டு வந்தோம்.

மறுநாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்த சென்றோம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். நாங்கள் வெலவெலத்துப் போய் விட்டோம். ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. அந்த அனுபவம் ஆச்சர்யமாக இருந்தது. குறிஞ்சிப் பூவை பார்ப்பதே அபூர்வம். நாங்கள் படப்பிடிப்பை நடத்திய இடத்தை சுற்றிலும் குறிஞ்சி பூ கண்கொள்ளா காட்சி. அதையும் எங்கள் காமிராவுக்குள் பதுக்கிக் கொண்டோம்.

அதை விட இன்னொரு அதிசயமும் நடந்தது. பனகுடி சோலையில் அந்த குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்கவில்லை என்பது அதிசயமான ஒன்று. கோயிலை சுற்றி உள்ள இடங்களில் பறந்த ஹெலிகேம் கோயில் மேல் பறக்காதது ஏன் என்பது தான் ஆச்சரியமானது. ஆசிப், மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மூன்று பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டப்படப்பிடிப்பில் ஜாக்கி ஷெராப் அகோரி கெட்டப்பில் இணைய உள்ளார்” என்றார் கஸ்தூரிராஜா.