பிரேம்ஜிக்காக ‘பார்ட்டி’யிலிருந்து யுவனை கழற்றி விட்ட வெங்கட்பிரபு!
வழக்கமாக ‘பார்ட்டி’ என்றால் யாருக்கும் தெரியாமல் ஏதாவது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தான் தன் சகாக்களுடன் நடத்துவார் டைரக்டர் வெங்கட்பிரபு.
ஆனால் இந்தமுறை ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தின் ஆடியோ பங்ஷனிலேயே நாங்க ‘பார்ட்டி’ கொண்டாடப் போறோம் என்று சொன்னதும் அங்கு வந்திருந்த பார்வையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் வியப்பு.
அப்புறம் தான் ஒரு வீடியோவைப் போட்டுக் காட்டவும் ‘பார்ட்டி’ என்பது வெங்கட்பிரபு இயக்கப் போகும் அடுத்த படத்தின் டைட்டில் என்று தெரிந்தது.
டி.சிவா’வின் ‘அம்மா கிரேஷன்ஸ்’ தயாரிப்பில் தயாராக இருக்கும் இந்த படம் அந்நிறுவத்தின் 25வது ஆண்டு விழாப்படமாகும்.
இளசுகளின் நாடியை என்றுமே நன்கு அறிந்து வைத்திருக்கும் வெங்கட் பிரபு ‘பார்ட்டி’ என படத்திற்கு பெயர் வைத்ததோடு தனக்கே உரிய ஸ்டைடில் ஏ வெங்கட்பிரபு ஹேங்க் ஓவர் என்று போட்டிருப்பது இன்னும் கூடுதல் குதூகலத்தைக் கொடுத்திருக்கிறது.
சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், என மூத்த கலைஞர்களுடன் ஜெய், மிர்ச்சி சிவா, சம்பத், ‘கயல்’ சந்திரன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி நிவேதா பெத்துராஜ் என டஜன் கணக்கில் யூத்துகளும் இந்தப் ‘பார்ட்டி’ யில் கலக்க உள்ளனர். ”’பார்ட்டி ‘ யின் படப்பிடிப்பு பிஜி தீவில் நடக்கவுள்ளது. ‘சரோஜா’ மூலம் எனக்கு இரண்டாவது தாய்வீடான அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்காக இப்படத்தை இயக்குவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. ‘பார்ட்டி’ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை” என்று கூறிய வெங்கட்பிரபு இந்தப் பார்ட்டியிலிருந்து தனது ஆஸ்த்தான இசையமைப்பாளர் யுவனை மட்டும் கழற்றி விட்டு விட்டார்.
ஆமாம், யுவன் ஷங்கர் ராஜாவுக்குப் பதில் இதில் வெங்கட்பிரபுவின் தம்பியும், நடிகருமான பிரேம்ஜி அமரன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இதுகுறித்துப் பேசிய யுவன் “இது நாங்களே பேசி எடுத்த முடிவு தான். வெங்கட்பிரபுவின் எந்தப்படத்தில் பிரேம்ஜி நடிக்கவில்லையோ? அந்தப்படத்தில் எனக்குப் பதிலாக அவர் இசையமைப்பார். அப்படித்தான் இதில் பிரேம்ஜி நடிக்கவில்லை. அதற்குப் பதிலாக அவர் இப்படத்துக்கு இசையமைக்கிறார். உண்மையிலேயே பிரேம்ஜிக்கு இசையறிவு நெறைய உண்டு. என்னுடைய பல படங்களில் இசையமைப்பில் எக்கச்சக்க உதவிகளைச் செய்தவர் அவர் தான். அதனால் என்னுடைய ரசிகர்கள் யாரும் வெங்கட்பிரபுவை திட்ட வேண்டாம் என்றார் யுவன்.