ராவணகோட்டம் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏனாதி கிராமத்தில் ஜாதி தீ எப்படி பற்றியெரிகிறது என்பதை வன்ம நெருப்பை ஊற்றிச் சொல்லியிருக்கும் படமே ராவணகோட்டம்

பிரபு தான் ஏனாதி உள்பட 16 கிராமங்களுக்கும் ஜவாப்தாரி. அவர் கண் அசைத்தால் ஊர் கேட்கும். அதே ஊரில் கீழத்தெரு தலக்கட்டான இளவரசு பிரபுவின் நண்பர். மேலத்தெரு கீழத்தெரு என இரு பிரிவுகளாக இருந்தாலும் அவர்கள் ஒற்றுமையாகத் தான் இருக்கிறார்கள். அந்த ஒற்றுமையை குலைக்கும் காரணி என்ன என்பதே படத்தின் கதை

சாந்தமான சாந்தனு தாண்டவம் ஆட முயற்சித்துள்ளார். காதல் காட்சிகளில் தெரியும் குறும்பு, ஆக்‌ஷன் & எமோஷ்னல் காட்சிகளில் தெரியும் மற்றொரு பரிணாமம் என அசத்தியுள்ளார் சாந்தனு. சஞ்சய் சரவணனும் ஓரளவு ஓகே ரகம். கயல் ஆனந்தி வழக்கம் போல அப்பாவி பெண் போல வந்து போகிறார். பிரபு இளவரசு இருவரும் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர். ஒற்றைக் கையோடு வரும் ஒரு கேரக்டர் மட்டும் நன்றாக மனதில் நிற்கிறது. அருள்தாஸ் வில்லனாக ஓரளவு ஈர்க்கிறார்

ராமநாத புரத்தின் கந்தக பூமியை கண் முன்னால் நிறுத்தியதில் கேமராமேன் ஜெயித்துள்ளார். ஒருசில பாடல்கள் ஓரளவு எடுபட்டுள்ளது. பின்னணி இசையில் அவ்வளவாக எனர்ஜில்லை.

படத்தின் பிரதான கதை இதுதான் என்பதில் தெளிவில்லை. காதலா? ஜாதியா? சீமகருவேலமரங்களா? என்பதில் ஏகப்பட்ட குழப்பம். மேலும் பிரிவினைகளுக்கு அச்சாரம் போடும் வகையில் இயக்குநர் காட்சிகளை அமைத்திருப்பதில் படம் ஒரு நேர்மையற்ற படைப்பாக மனதில் பதிகிறது. அரசியலாகவும் அழகியலாகவும் ஈர்க்காமல் மொத்தமாக கோட்டை விட்டு கொட்டாவி விட வைக்கிறது ராவண கோட்டம்

2/5

#Raavanakottam #ராவணகோட்டம்