வரவேற்பைக் குவித்து வரும் “ரஜினி கேங்” ஃபர்ஸ்ட் லுக் !
MISHRI ENTERPRISES திரு செயின்ராஜ் ஜெயின் அவர்களின் தயாரிப்பில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற “ஜெய்ஹிந்த்” (முதல் பாகம்) மற்றும் சமீபத்தில் வெளியான “அஷ்டகர்மா” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில் கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரஜினி கேங்”.
நேற்று வெளியான இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
மறைந்த எஸ். செயின்ராஜ் ஜெயின் அவர்களால் நிறுவப்பட்ட MISHRI ENTERPRISES, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக திரைப்பட பைனான்ஸ், விநியோகம் மற்றும் தயாரிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஜெய் ஹிந்த், அஷ்டகர்மா ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, ரஜினி கேங் அவர்களின் மூன்றாவது பெரிய தயாரிப்பாக, பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில், அவர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள், அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என கலகலப்பான திரைக்கதையில், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது.
பிஸ்தா திரைப்படம் மற்றும் உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குநர் M ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக திவிகா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் படம் முழுக்க வரும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் அசத்தியுள்ளது.
பொறியாளன், போங்கு, சட்டம் என் கையில் போன்ற படங்களின் இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் 4 அற்புதமான பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து 2.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் படப்பை, மறைமலைநகர் போன்ற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த வருட இறுதியில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டுள்ளது.