ரஜினியோட ‘பாட்ஷா’ மாதிரி! : ஆஹா கேட்கும் போதே எவ்ளோ சந்தோஷம்!

உங்க குருநாதர் படம் மாதிரியே உங்க படத்தோட ஹீரோவும் ஒரு ஆட்டோகாரர் தான்.
அப்போ இதுவும் பாட்ஷா மாதிரி இருக்குமா? என்று கேட்கவும் அய்யய்யோ அவ்ளோ லெவல் எல்லாம் வேணாம் சார். அது சூப்பர் ஸ்டாரோட படம். அதோட கதைக்களம் வேற. இந்தப் படத்தோட ஹீரோ இப்போதான் பிக்கப் ஆகிற ஹீரோ. கதைக்களமும் வேற. பட் அதை ஞாபகப்படுத்துற மாதிரி என் படம் இருக்கிறதை கேட்கிறப்பவே வெற்றிக்கான சந்தோஷம் இருக்கு என்றார் இயக்குநர் கே.ராஜீவ் பிரசாத்.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் பாட்ஷா படம் தொடங்கி உதவி இயக்குநராகவும் பின்னர் இணை இயக்குநராகவும் பணிபுரிந்தவர். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே.பிரசாத்தின் மகன்.
குபேரன் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக குபேரன் பொன்னுசாமி தயாரிக்கும் ‘சதுரன்’ படத்தின் இயக்குநரான இவருக்கு இதுதான் முதல்படம்.
ஹீரோ ஒரு ஆட்டோக்காரர்ங்கிறதோட கதை முடியப்போறதில்லை. அவர் ஆட்டோவுல ஒருநாள் இரவு நாலு பேர் ட்ராவல் பண்றாங்க. அதனால அவர் சந்திக்கிற பிரச்சனைகள் என்னங்கிறது தான் இந்தப் படத்தோட சுவாரஷ்யம். ஒரே இரவில் நடக்கிற கதையில மருத்துவ துறையில் நடக்கிற சில விபரீதங்களைத் தான் படமாக்கியிருக்கிறேன் என்றார்.
மூடர் கூடம் படத்தில் நடித்த ராஜாஜ் இந்தப் படத்தின் ஹீரோ. அவருக்கு ஜோடியாக பெங்களூருவைச் சேர்ந்த மலேத்திரியாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
அசப்பில் பார்ப்பதற்கு நஸ்ரியா மாதிரியே இருந்தார் மலேத்திரியா. எதற்காக அவரைப் போலவே ஒரு அறிமுகம்?
கேட்டோம் இயக்குநரிடம்… ‘இந்தப் படத்தோட ஹீரோயின் ப்யூட்டி பார்லர்ற வேலை செய்ற பெண். அதோட எப்பவுமே துறுதுறுன்னு இருக்கிற பெண். அதற்கு நஸ்ரியா தான் சரியா இருப்பார். இப்போ அவருக்கு மேரேஜ் ஆகிட்டதால அவரை மாதிரியே ஒரு ஹீரோயினைத் தேடினப்பத்தான் இந்த மலேத்திரியா கெடைச்சாங்க. ஆள் பார்க்கிறதுக்கு மட்டும் நஸ்ரியா மாதிரி இல்ல. நடிப்பிலேயும் அவரை மாதிரியே ஜமாய்ச்சிருக்கார்’ என்றார். இவங்களோட காளி வெங்கட், பாவா லட்சுமணன், அத்திக் அஹமது, தமிழ், ராஜு ஈஸ்வரன், கயல் தேவராஜ், கெளதம் கிருஷ்ணா, உமாமகேஸ்வரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்திருக்கும் ஹீரோ ராஜாஜ் அதற்காக ஸ்பெஷலாக பயிற்சியும் எடுத்திருக்கிறார். ஆமாம் சார் ஆட்டோ டிரைவர்னு சொன்ன உடனே ஆட்டோ ஓட்ட ட்ரெயினிங் எடுத்தேன். முழுப்படத்திலும் நானே ஆட்டோ ஓட்டி நடிச்சிருக்கேன். படத்துல ஆட்டோவும் ஒரு முக்கிய கேரக்டரா வர்றதுனால கம்பெனியில சொந்தமாகவே ஒரு ஆட்டோவை வாங்கிட்டாங்க. கோயம்பேடுக்கு போகணும்னா கூட நானே தான் எங்க டீமை கூட்டிக்கிட்டு ஜாலியே ஓட்டிக்கிட்டுப் போவேன் என்று சிரிக்கும் ராஜாஜ் கைவசம் மூன்று படங்களை வைத்திருக்கிறாராம்.
நஸ்ரியான்னு சொன்னதும் தான் பீதி கெளம்புது, இத்துணுண்டு இடுப்பு மேட்டரை கமிஷனர் ஆபீஸ் வரைக்கும் கொண்டு போய் களேபரம் பண்ணினவங்க அவங்க. நீங்க அந்த மாதிரி ஏதாவது? கேள்வியை முடிப்பதற்குள் சிரிக்கிறார் மலேத்திரியா.
அவங்க எந்த சூழல்ல அப்படி நடந்துக்கிட்டாங்கன்னு எனக்குத் தெரியல. ஆனால் நான் அந்த லெவலுக்கெல்லாம் போக மாட்டேன். ஒரு படத்தோட கதையை கேட்கும் போது எனக்கு கிளாமல் செட்டாகும், ஆகாதுன்னு டைரக்டர்கிட்ட சொல்லிடுவேன். அதுக்கெல்லாம் அவங்க் ஓ.கே சொன்னாதான் நடிப்பேன். மத்தபடி முதல்ல ஓ.கே சொல்லிட்டு அப்புறம் டபாய்க்கிற ஆள் நானில்லை என்றார்.
இம்மாத ரிலீசாக வர இருக்கும் சதுரன் படத்தை வஜ்ரம் படத்தை தயாரித்த ஸ்ரீ சாய்ராம் சினிமாஸ் தான் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது.